திமுக வெல்லும்.. அமமுக 2வது இடம் பெறும்.. அதிமுகவுக்கு 3தான்.. நாஞ்சில் சம்பத் அதிரடி
Recommended Video
புதுச்சேரி: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் திமுக கூட்டணியே வெல்லும். அமமுக 2வது இடத்தைப் பெறும். அதிமுகவுக்கு 3வது இடமே கிடைக்கும் என்று நாஞ்சில் சம்பத் கூறியுள்ளார்.
திமுக - காங்கிரஸ் கூட்டணியில் புதுச்சேரி மக்களவை தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் முன்னாள் சபாநாயகர் வைத்தியலிங்கத்தை ஆதரித்து தவளக்குப்பம் கிராமத்தில் நாஞ்சில் சம்பத்தை தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
பிரச்சார கூட்டத்தில் தொண்டர்கள் மத்தியில் பேசிய நாஞ்சில் சம்பத், கட்சி அரசியலில் இருந்து விலகி, கடந்த ஓராண்டாக இலக்கிய பணியில் ஈடுபட்டிருந்த நான், இந்த பாராளுமன்ற தேர்தலில் பாஜக அரசை வீழ்த்தும் களத்தில் இல்லையென்றால், உயிரோடு இருப்பதற்கு அர்த்தமில்லை என்பதற்காக மீண்டும் தேர்தல் களத்திற்கு வந்துள்ளேன்.
ரபேல் போர் விமானங்கள் ஒப்பந்தத்தில் 30 ஆயிரம் கோடி அளவிற்கு மோடி ஊழல் செய்துள்ளதாகவும், இந்தியாவின் பன்முகத் தன்மையை மோடி பாழ்படுத்திவிட்டதாகவும், இந்தியாவின் மதசார்பின்மைக்கு மாரடைப்பு வந்துவிட்டதாகவும், மோடியின் ஆட்சியை எந்த தரப்பு மக்களும் விரும்பவில்லை என்றும், மோடி அரசை வீழ்த்துவதற்கு அனைத்து தரப்பு மக்களும் தயாராகிவிட்டனர் என்றார்.
மேலும் பேசிய அவர், கிரண்பேடி ஆணா? இல்லை பெண்ணா என்று தெரியவில்லை என கேள்வி எழுப்பிய அவர், புதுச்சேரியில் ஆளும் அரசின் செயல்பாடுகளை கிரண்பேடி தொடர்ந்து முடக்கி வருவதாக குற்றம்சாட்டினார்.
பிரச்சார கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய நாஞ்சில் சம்பத், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் தமிழகத்தில் இரண்டாவது இடத்தையும், எடப்பாடியின் அதிமுக மூன்றாவது இடத்தை பெறும் என்றார். மேலும் திமுகவிற்காக பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளது குறித்து செய்தியாளர்கள் கேள்விக்கு பதிலளித்த நாஞ்சில் சம்பத், நான் மட்டுமே கொள்கையுள்ள அரசியல்வாதி, நான் 32 ஆண்டுகளாக ஒரே கொள்கையை பேசி வருகிறேன். இடம் மாறினாலும், தடம் மாறாமல் பயணிக்கின்ற ஒரே நபர் நான் என தெரிவித்தார்.