கனமழை எதிரொலி.. புதுவையில் 2 நாட்களுக்கு பள்ளி, கல்லூரிகளுக்கு லீவ்.. அமைச்சர் நமச்சிவாயம் அறிவிப்பு
புதுவை: தொடர் மழை காரணமாகப் புதுச்சேரி மற்றும் காரைக்காலில் நாளை (நவ. 29) மற்றும் நாளை மறுநாள் (நவ. 30) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாகப் புதுவை கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் அறிவித்துள்ளார்.
நாளைய தினம் (நவ. 29) கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிகக் கன மழையும், தூத்துக்குடி, இராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய கடலோர மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் நாளை (நவ. 29) இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையு பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது. அதேபோல நாளை மறுநாளும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், தொடர் மழை காரணமாகப் புதுச்சேரி மற்றும் காரைக்காலில் நாளை (நவ. 29) மற்றும் நாளை மறுநாள் (நவ. 30) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாகப் புதுவை கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் அறிவித்துள்ளார்.
முன்னதாக தமிழகத்திலும் கனமழை எதிரொலியாகச் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, நெல்லை, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.