காமராஜர் நகர் இடைத் தேர்தல்.. புதுச்சேரியில் வாக்குப் பதிவு விகிதம் சரிந்தது.. 69.44% பதிவு!
Recommended Video
புதுச்சேரி: புதுச்சேரி காமராஜ் நகர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் சராசரியாக 69.44 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
புதுச்சேரி மாநிலத்தில் உள்ள காமராஜ் நகர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஜான்குமாரும், பிரதான எதிர்க்கட்சியான என்.ஆர்.காங்கிரஸ் சார்பில் புவனேஸ்வரன் உள்பட 9 பேர் வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இந்நிலையில் காமராஜ் நகர் தொகுதியில் இன்று காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்றது.
முன்னதாக வாக்குச்சாவடி முகவர்கள் முன்னிலையில் வாக்குப்பதிவு எந்திரங்கள் முத்திரை பிரிக்கப்பட்டு முதலில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது. புதுச்சேரியில் கடந்த இரண்டு நாட்களாக பெய்துவரும் மழை, மூன்றாவது நாளாக இன்றும் தொடர்ந்து பெய்து வருவதால் வாக்குப்பதிவு மந்தமாக நடைபெற்றது.
காமராஜ் நகர் தொகுதியை பொருத்தவரை 11 வெளிநாடு வாழ் இந்தியர்கள் உள்பட 35 ஆயிரத்து 9 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 17 ஆயிரத்து 47 பேர் ஆண்கள். 17 ஆயிரத்து 961 பேர் பெண்கள். ஒருவர் 3 ஆம் பாலினத்தவர். வாக்காளர்கள் அமைதியான முறையில் வாக்களிப்பதற்காக 21 இடங்களில் மொத்தம் 32 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன.
தேர்தலை நேர்மையாகவும், அமைதியாகவும் நடத்த தேர்தல் ஆணையம் அனைத்து ஏற்பாடுகளையும் விரிவாக செய்திருந்தது. மேலும் வாக்குச்சாவடிகளில் குடிநீர், கழிப்பறை, நிழற்பந்தல், மாற்றுத்திறனாளிகள், முதியவர்களுக்கு சாய்வுதளம் போன்ற அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டிருந்தன. அதேபோல் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்துடன் வி.வி.பாட் எந்திரமும் பயன்படுத்தப்பட்டது. வாக்குச்சாவடிகள் அனைத்தும் வலைதளம் மூலம் நேரடியாக கண்காணிக்கப்பட்டது.
பாதுகாப்பு பணியை பொருத்துவரை துணை ராணுவ படையினர் மற்றும் புதுச்சேரி போலீசார் நூற்றுக்கும் மேற்பட்டோர் இணைந்து பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். 7 வாக்குச்சாவடிகள் பதற்றம் நிறைந்தவையாக அடையாளம் காணப்பட்டு அங்கு கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டது.
காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணியுடன் முடிவடைந்துள்ளது. வாக்குப்பதிவு எந்தவித அசம்பாவித சம்பவங்களுமின்றி அமைதியான முறையில் நடந்து முடிந்துள்ளது. இறுதிக் கட்ட வாக்குப் பதிவு நிலவரத்தின்படி மொத்தம் உள்ள 35,009 வாக்குகளில் 24,296 வாக்குகள் பதிவாகின. அதாவது 69.44 சத
வாக்குகள் பதிவாகியிருந்தன. இது கடந்த தேர்தலில் பதிவானதை விட 5.9 சதவீத வாக்குகள் குறைவாகும். கடந்த தேர்தலில் 75.3 சதவீதம் வாக்குகள் பதிவாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.
சரியாக மாலை 6 மணிக்கு வாக்குப்பதிவு முடிவடைந்ததும், மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அரசியல் கட்சிகளின் முகவர்கள் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டு, பலத்த பாதுகாப்புடன் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் இடமான லாஸ்பேட்டை பகுதியில் உள்ள மோதிலால் நேரு ஆண்கள் தொழில்நுட்ப கல்லூரிக்கு கொண்டு செல்லப்படுகிறது. 32 வாக்குச்சாவடிகளில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் விவிபாட் இயந்திரங்கள் அங்குள்ள பாதுகாப்பு அறையில் 3 அடுக்கு பாதுகாப்புடன் வைக்கப்பட உள்ளன. இதனையடுத்து வருகின்ற 24 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
காமராஜ் நகர் தொகுதியை பொருத்தவரை காங்கிரஸ் - என்.ஆர்.காங்கிரஸிக்கும் இடையேதான் நேரடி போட்டி. காமராஜ் நகர் தொகுதி இடைத்தேர்தல் 2021 சட்டமன்ற தேர்தலுக்கு ஒரு முன்னோட்டமாகவும் பார்க்கப்படுவதால், புதுச்சேரியில் உள்ள அரசியல் கட்சிகள் காமராஜ் நகர் இடைத்தேர்தல் தேர்தல் முடிவுகளை எதிர்பார்த்து காத்துள்ளனர் என்றே கூறலாம்.