9 வயது சிறுமியிடம் பாலியல் கொடுமை.. ரீடிங் எடுக்க வந்த மின் ஊழியர் அட்டகாசம்!
புதுச்சேரி: புதுச்சேரியில் ரீடிங் எடுக்க சென்றபோது வீட்டில் தனியாக இருந்த 9 வயது சிறுமியை மின்துறை ஊழியர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி அருகே அபிஷேகப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் வினோத் (வயது 26). புதுச்சேரி அரசின் மின்துறை ஊழியரான இவர் வீடு, வீடாக சென்று மின் மீட்டர் ரீடிங் கணக்கெடுத்து பில் போடும் பணியில் ஈடுபட்டு வந்தார். அதன்படி வினோத் பாகூர் அருகே உள்ள ஒரு கிராமத்தில் வீடுகளில் மீட்டர் ரீடிங் கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார்.
அப்போது அங்குள்ள ஒரு வீட்டில் வினோத் மின் மீட்டர் ரீடிங் எடுத்தபோது, அந்த வீட்டில் 9 வயது சிறுமி மட்டும் தனியாக இருப்பதை தெரிந்து கொண்டார். இதனையடுத்து சிறுமியிடம் குடிக்க தண்ணீர் வேண்டும் என்று வினோத் கேட்க, அந்த சிறுமியும் தண்ணீர் எடுத்து வர வீட்டின் உள்ளே சென்றுள்ளார்.
அப்போது பின் தொடர்ந்து சென்ற வினோத் அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனை சற்றும் எதிர்பாராத அந்த சிறுமி கூச்சலிட்டபோது, யாரிடமாவது இது பற்றி கூறினால் கொலை செய்து விடுவதாக சிறுமியை மிரட்டி விட்டு வினோத் அங்கிருந்து சென்று விட்டார். சிறிது நேரம் கழித்து வீட்டுக்கு வந்த பெற்றோரிடம் நடந்த விவரத்தை கூறி சிறுமி அழுதுள்ளார்.
இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் சிறுமியை மீட்டு ராஜீவ்காந்தி மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனையிலா சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அந்த சிறுமிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே அந்த சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் பாகூர் காவல்நிலைய போலீசார் வினோத்தை கைது செய்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
காமக்கொடூர மாமனார்கள்... தற்கொலை செய்து உயிரை மாய்த்துக்கொண்ட மருமகள்கள்