புதுவையில் மின் ஊழியர்கள் போராட்டம்: போலீஸ் கட்டுப்பாட்டில் 16 மின் நிலையங்கள்.. துணை ராணுவம் வருகை?
புதுவை: புதுச்சேரியில் 16 துணை மின் நிலையங்களை காவல்துறை தங்களது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளது என்றும் இதேபோல் நிலைமையை சமாளிக்க துணை ராணுவம் புதுச்சேரி வர இருக்கின்றனர் எனவும் புதுவை மின்சார துறை அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில் மின் துறையை தனியார் மயமாக்கும் முயற்சிகள் நடப்பதாக கூறப்பட்டு வந்த நிலையில், அதை உறுதி படுத்தும் வகையில் டெண்டர் அறிவிப்பு வெளியானது.
இது மின் துறையில் பணியாற்றும் ஊழியர்களுக்கு பெரும் அதிர்ச்சியாக அமைந்தது.
“அப்டேட்” ஆன ஆர்எஸ்எஸ்.. டவுசருக்கு பதில் “காக்கி பேண்ட்” - புதுச்சேரி அணிவகுப்பில் பாஜக அமைச்சர்கள்
வேலை நிறுத்த போராட்டம்
உடனடியாக புதுவை அரசின் இந்த செயலை கண்டித்து மின்சார துறை ஊழியர்கள் கடந்த 28 ஆம் தேதி முதல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மின் துறையில் பணியாற்றும் ஊழியர்கள் சுமார் 2,000 பேர் இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால், மின் துறையில் உள்ள பாதிப்புகள் அடியோடு பாதிக்கப்பட்டன. ஒப்பந்த ஊழியர்களை கொண்டு ஓரளவு மின் விநியோகம் சீர் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
எஸ்மா சட்டம் பாயும்
ஆனாலும் மின் பணிகள் பெருமளவு பாதிக்கப்பட்டது. மின்சார ஊழியர்களின் போராட்டத்தால் நேற்று புதுவை இருளில் மூழ்கியது. இதையடுத்து, தற்காலிக ஊழியர்களை கொண்டு நிலைமை சீர் செய்யப்பட்டது. மின்சார் ஊழியர்கள் பணிக்கு திரும்பாவிட்டால் எஸ்மா சட்டம் பாயும் என்று புதுவை துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் எச்சரித்தார். இருந்தாலும் இன்னும் இயல்பு நிலை திரும்பவில்லை.
வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது
இதனிடையே, புதுவை மின்சார துறை அமைச்சர் நமச்சிவாயத்திடம் இது குறித்து கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்து நமச்சிவாயம் கூறியதாவது:- பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் பியூஸ் கேரியரை பிடுங்கிய ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பேச்சுவாரத்தை குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி விட்டு முடிவு செய்வோம். மின் வாரியத்தில் பியூஸ் கேரியரை பிடுங்கியவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
காவல்துறை கட்டுப்பாட்டில்
துணைமின் நிலையங்களில் காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மின் துறையை தனியார்மயமாக்கும் திட்டத்தை நிறுத்தி வைக்கும் திடடம் இல்லை. போராட்டத்தால் அசாதாரண சூழல் ஏற்பட்டுள்ளதால் விரைவில் மத்திய ரிசர்வ் படையினர் புதுச்சேரி வருகை தர உள்ளனர். 16 துணை மின் நிலையங்களும் காவல்துறை கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டு இருக்கிறது'' என்றார்.