தலைக்கு மேல் டிக் மார்க்.. மாஜி அமைச்சரின் குடும்பத்துக்கே குறியா?.. புதுவையில் ரவுடிகளால் பரபரப்பு
Recommended Video
புதுவை: மாஜி அமைச்சர் தேனீ ஜெயக்குமாரின் சம்பந்தியான புதுவை வழக்கறிஞரும், அவரது மனைவியும் கொல்லப்பட்ட சம்பவத்தில் அவர்களது குடும்ப புகைப்படத்தில் மர்ம நபர்கள் தலைக்கு மேல் டிக்மார்க் போட்டியிருப்பது நெஞ்சை பதைபதைக்க வைக்கும் வகையில் உள்ளது.
புதுவை நெல்லித்தோப்பு அண்ணாநகர் 14-ஆவது குறுக்கு தெருவை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (72). இவரது மனைவி ஹேமலதா (65). இருவரும் பிரெஞ்சு குடியுரிமை பெற்றவர்கள். இவர்களுக்கு நாராயணன், சந்தோஷ் ஆகிய இரு மகன்களும் ஒரு மகளும் உள்ளனர்.
மகன்கள் இருவரும் பிரான்ஸ் நாட்டிலும் மகள் சிங்கப்பூரிலும் செட்டில் ஆகிவிட்டனர். முன்னாள் அமைச்சர் தேனீ ஜெயக்குமாரின் மகளை பாலகிருஷ்ணனின் மகன் திருமணம் செய்து கொண்டுள்ளார். வயதான தம்பதி புதுவையில் உள்ள 2 அடுக்குமாடி வீட்டின் தரைதளத்தில் வசித்து வந்தனர்.
2-ஆவது தளத்தில் குடித்தனம்
முதல் தளத்தில் உள்ள வீடு காலியாக உள்ளது. 2-ஆவது தளத்தில் ஒரு குடும்பம் குடியிருந்து வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு நீண்ட நேரமாகியும் பாலகிருஷ்ணனின் வீட்டில் வெளி விளக்கு போடப்படாமல் இருந்தது. இதையடுத்து மேல் வீட்டில் வாடகைக்கு இருப்பவர்கள் கீழே செல்லும் போது விளக்கை போட்டு விட்டு சென்றனர்.
போலீஸுடன் வந்த முன்னாள் அமைச்சர்
நேற்று காலை 2-ஆவது மாடியில் குடியிருப்பவர்கள் கீழே செல்லும் போது பாலகிருஷ்ணனின் வீட்டில் ஆள்நடமாட்டம் இல்லாமல் இருந்ததை அறிந்தனர். கதவும் உள்புறமாக தாழிடப்பட்டிருந்தது. தகவலறிந்த தேனீ ஜெயக்குமார் சம்பவ இடத்துக்கு போலீஸாருசன் வருகை தந்தார். அப்போதுதான் பாலகிருஷ்ணனும் ஹேமலதாவும் படுகொலை செய்யப்பட்டிருந்தது தெரியவந்தது. இதுகுறித்து உருளையன்பேட்டை போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
போலீஸ் அதிர்ச்சி
வீட்டை போலீஸார் சோதனையிட்டபோது சடலங்களுக்கு அருகே ஒரு குடும்ப புகைப்படம் இருந்தது. இந்த புகைப்படத்தில் இறந்த தம்பதியின் முகத்தில் பெருக்கல் குறியீடும், தேனீ ஜெயக்குமாரின் மகள் முகத்தில் ரவுண்ட் செய்தும், மற்றவர்களின் முகத்தில் டிக் மார்க்கும் இருந்ததை போலீஸார் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
விசாரணை
புதுவையில் ரவுடிகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. அப்பகுதியில் கொலை. கொள்ளைகள் சர்வசாதாரணமாக நடந்து வருகிறது. இந்நிலையில் சினிமா பாணியில் புகைப்படத்தில் மார்க் செய்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒரு வேளை அடுத்த குறி முன்னாள் அமைச்சரின் மகளுக்கா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. இதுதொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
பெண் ரவுடி கைது
பெண் ரவுடி தாதா எழிலரசியின் கணவர் கொலைக்கு முன்னாள் அமைச்சர் வி.எம்.சி. சிவக்குமாருக்கும் தொடர்பு உண்டு என்று கருதி அவர் மீது வெடிகுண்டு வீசியும் அரிவாளால் வெட்டியும் கொலை செய்து விட்டு தப்பியோடினர். இதையடுத்து ரவுடி எழிலரசி உள்பட 14 பேர் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.