''கரிசல் இயக்கத்தின் தந்தை' என்று போற்றப்படும் எழுத்தாளர் கி.ரா. காலமானார்
புதுவை: கரிசல் இயக்கத்தின் தந்தை என்று போற்றப்படும் கி.ரா வயது மூப்பு காரணமாகத் தனது 99 வயதில் காலமானார்.
கரிசல் காட்டு மக்களையும் அவர்களின் வாழ்வியலைப் பதிவு செய்த தமிழ் எழுத்தாளர்களில் முதன்மையானவர் கி.ரா என்று அழைக்கப்படும் கி.ராஜநாராயணன்.
கரிசல் இயக்கத்தின் தந்தை என்று போற்றப்படும் இவர், வயது மூப்பு காரணமாகத் தனது 99 வயதில் காலமானார். புதுச்சேரியிலுள்ள கருவடிக்குப்பத்தில் இன்று மாலை 6 மணிக்கு அவரது உடல் நல்லடக்கம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை அடுத்துள்ள இடைசெவல் கிராமத்தில் 1922ஆம் ஆண்டு பிறந்த கிராவின் இயற்பெயர் ராயங்கல ஸ்ரீ கிருஷ்ண ராஜ நாராயணன பெருமாள் என்பதாகும். இவர் ஏழாம் வகுப்பு வரை படித்துள்ளார்.
அதன் பின்னர் விவசாயம் பார்த்து வந்த கிரா, 40 வயதுக்கு மேல் எழுத்து பணிகளைத் தொடங்கினார். சிறுகதை, குறுநாவல், நாவல், கிராமிய கதைகள் எனப் பல தளங்கியங்களிலும் சிறந்து விளங்கியவர் கி.ரா.
கடந்த 1991ஆம் ஆண்டு இவரது 'கோபல்லபுரத்து மக்கள்' என்ற படைப்பிற்குச் சாகித்திய அகாடாமி விருது வழங்கப்பட்டது. கரிசல் கதைகள், கொத்தைப்பருத்தி உள்ளிட்டவை கி.ரா.வின் மற்ற முக்கிய படைப்புகளாகும். இவர் இலக்கிய சிந்தனை விருது, தமிழக அரசு விருது, தமிழ் இலக்கிய சாதனை விருது உள்ளிட்ட பல முக்கிய விருதுகளைப் பெற்றுள்ளார்.
கிராவின் மறைவு தமிழ் மொழிக்கே ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்.