மறைந்தார் எழுத்தாளர் பிரபஞ்சன்
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட எழுத்தாளர் பிரபஞ்சன் இன்று காலமானார்
Recommended Video
புதுச்சேரி: புற்றுநோய் காரணமாக சிகிச்சை பெற்று வந்த சாகித்ய அகாடமி விருதுப்பெற்ற பிரபல எழுத்தாளர் பிரபஞ்சன் இன்று காலமானார். அவருக்கு வயது 73.
எழுத்தாளர் பிரபஞ்சன் புதுவையை சேர்ந்தவர் 100க்கும் மேற்பட்ட நாவல்கள் எழுதியவர். இவரது வானம் வசப்படும்' என்ற வரலாற்றுப் புதினத்திற்கு, 1995-ம் ஆண்டு தமிழுக்கான சாகித்ய அகாடமி விருதைப் பெற்றது.
அது மட்டும் அல்லாமல் இவர் புதுவை அரசின் சிறந்த எழுத்தாளருக்கான விருதையும் பெற்றவர். இதே போல தமிழக அரசின் சிறந்த எழுத்தாளர்களுக்கான விருதையும் பெற்றுள்ளார். இதுவரை 86 புத்தகங்களுக்கு மேல் இவர் எழுதி இருக்கிறார்.
தீவிர சிகிச்சை
கடந்த ஒரு வருடமாகவே பிரபஞ்சன் புற்றுநோயால் அவதிப்பட்டு வந்தார். நோய் தீவிரம் காரணமாக கடந்த 6 மாதங்களுக்கு முன்பு புதுவை மதகடிப்பட்டில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு 2 மாத காலம் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
மீண்டும் அனுமதி
இந்த சிகிச்சையில் ஓரளவு உடல் நலம் தேறியது. ஆனாலும் கடந்த மாதம் 15ம் தேதி திரும்பவும் உடல்நிலை மோசமானதால், ஏற்கனவே சிகிச்சை எடுத்து கொண்ட, அதே தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
எழுத்தாளுமை
அங்கு அவருக்கு மருத்துவர்கள் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். எனினும் சிகிச்சை பலனளிக்காமல் பிரபஞ்சன் இன்று காலமானார். பிரபஞ்சனின் மரணம் தமிழ் இலக்கியத்துக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு ஆகும். ஏனெனில், தமிழ் இலக்கியத்தில் தவிர்க்க முடியாத எழுத்தாளுமைகளில் மிக மிக முக்கியமானவர் பிரபஞ்சன்.
அரசியல், பண்பாடு
புதுச்சேரியை பூர்வீகமாக கொண்டதாலோ என்னவோ, அந்தமாநில வரலாற்றை பற்றி மிக மிக துல்லியமாக எழுதினார். புதுச்சேரியின் வரலாறு, அரசியல், பண்பாட்டினை உலக அரங்குக்கு கொண்டு சென்றார். இலக்கிய உலகின் சமகால சரித்திரம் இன்று சாய்ந்து விழுந்தது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அடையாளம்
ஏராளமான இலக்கியவாதிகளும், தமிழ் சிந்தனையாளர்களும் பிரபஞ்சன் மரணத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர். பிரபஞ்சன் புதுச்சேரியை சேர்ந்தவராக இருந்தாலும் அவரை தமிழக மக்கள் தூக்கி கொண்டாடுவதே அவரது இலக்கிய பணிக்கு ஆற்றிய சேவையின் அடையாளம் ஆகும்.