அரசியலில் குதிக்கப் போவதாக அறிவித்த.. மாஜி தாதா எழிலரசி திடீர் கைது!
புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில் முன்னாள் சபாநாயகர் கொலை வழக்கில் ஜாமினில் வெளியே வந்து, சமூக பணிகளில் ஈடுபட்டு வந்த பிரபல பெண் தாதா எழிலரசியை போலீசார் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டம் திருப்பட்டினத்தை சேர்ந்தவர் பிரபல சாராய வியாபாரி ராமு. இவரது மனைவி வினோதா. இந்நிலையில் இரண்டாவதாக எழிலரசி என்ற பெண்ணை ராமு திருமணம் செய்து கொண்டார்.
இதன்பிறகு வினோதாவிற்கு எழிலரசி அடிக்கடி பல்வேறு தொல்லைகள் தர ஆரம்பித்துள்ளார். மேலும் இருவருக்குள்ளும் சொத்து பிரச்சினையும் இருந்துவந்துள்ளது.
ஜமால்.. சமாதி மீது கைவைத்து உருகிய அமேசான் அதிபர் பெஸோஸ்.. சவுதி சல்மானுக்கு ரகசிய வார்னிங்!
கொலை திட்டம்
இதனால் ஆத்திரமடைந்த முதல் மனைவி வினோதா, கணவர் ராமு - எழிலரசி இருவரையும் கொலை செய்வதற்கு திட்டம் தீட்டி, கூலிப்படையினரால் கடந்த 2013 ஆம் ஆண்டு ராமு - எழிலரிசி சரமாரியாக வெட்டப்பட்டனர். இதில் ராமு படுகொலை செய்யப்பட்டார். எழிலரசி காயங்களுடன் உயிர் தப்பினார். கணவர் ராமு கொலைக்கு பழிக்குப்பழியாக அவரது முதல் மனைவி வினோதா மற்றும் உறவினர் எழிலரசியின் ஆதரவாளர்களால் கொலை செய்யப்பட்டனர்.
பழிதீர்க்க
இதனிடையே தனது கணவர் கொலைக்கு மேலும் பழிதீர்க்கும் வகையில், கடந்த 2017 ஆம் ஆண்டு புதுச்சேரி மாநிலத்தின் முன்னாள் சபாநாயகர் சிவக்குமாரை திருபட்டினத்தில் புதிதாக அவர் கட்டி வந்த திருமண மண்டப கட்டிடத்தில் வைத்து, எழிலரசியின் ஆதரவாளர்கள் வெடிகுண்டு வீசி வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் அப்போது புதுச்சேரியில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த கொலை வழக்கில் முதல் குற்றவாளியாக எழிலரசி மற்றும் கூலிப்படையினர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
மிகப்பெரிய பெண் தாதா
தொடர் கொலை உள்ளிட்ட சம்பவங்களால் புதுச்சேரி மாநிலத்தில் மிகப்பெரிய பெண் தாதாவாக எழிலரசியை உருவானார். இதற்கிடையில் கடந்த ஆண்டு கொலை வழக்கில் இருந்து ஜாமினில் வெளியே வந்த எழிலரசி, தாதா தொழிலை விட்டு, பல்வேறு சமூக சேவைகளை செய்து வந்ததாக கூறப்படுகிறது. இறந்தவர்களின் உடலை பாதுகாக்க ஐஸ் பெட்டி வழங்குதல் , சாமியானா பந்தல் அமைத்து கொடுத்தல், திருமண உதவி, கல்வி உதவி உள்ளிட்டவற்றை செய்து வந்துள்ளார். இதற்காக அவரது கணவர் ராமு பெயரில் அறக்கட்டளை ஒன்றை நிறுவி அதனை நிர்வகித்து வந்துள்ளார்.
தேர்தலில் போட்டி
இந்நிலையில் தனது தொகுதி மக்களுக்கு சேவை செய்வதற்காக, வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட போவதாக கடந்த சில தினங்களுக்கு முன்பு எழிலரசி அறிவித்திருந்தார். இதனிடையே, எழிலரசி கட்டப்பஞ்சாயத்து உள்ளிட்ட பல்வேறு சமூக விரோத செயல்களில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருவதாகவும், அவர் வெளியே இருந்தால் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படும் எனக்கூறி நிரவி போலீசார், எழிலரசியை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய காரைக்கால் மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி கேட்டிருந்த நிலையில், எழிலரசியை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய மாவட்ட ஆட்சியர் விக்ரந்த்ராஜா உத்தரவிட்டதை தொடர்ந்து, நிரவி போலீசார் எழிலரசியை கைது செய்து புதுச்சேரி மத்திய சிறையில் அடைத்துள்ளனர். பெண் தாதா எழிலரசி மீது 3 கொலை வழக்குகள் உள்பட 10 வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.