அய்யோ.. வாட்ஸ் அப்பிலுமா.. கிரண்பேடி-நாராயணசாமியால் அலறும் புதுவை அதிகாரிகள்
புதுச்சேரி: புதுச்சேரி முதல்வர் நாராயணசாமியும், அம்மாநில துணை நிலை ஆளுநர் கிரண்பேடியும் அறிக்கைகளில் மட்டுமல்ல வாட்ஸ் ஆப் குழுக்களிலும் இப்போது சண்டையிட்டு கொள்வதால் புதுவை அதிகாரிகள் அதிர்ச்சியில் தவித்து வருகிறார்கள். இவர்கள் சண்டைக்கு ஒரு எண்டே கிடையாத என்ற ரீதியில் எப்போது தான் இந்த பஞ்சாயத்து ஓயுமோ என அதிகாரிகள் வேதனையில் உள்ளார்கள்.
புதுச்சேரியில் 2016ம் ஆண்டு நடைபெற்ற சட்டபேரவை தேர்தலில் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் திமுக கூட்டணி அரசு அமைந்தது. முதல்வராக நாராயணசாமி பொறுப்பேற்றார். அப்போது அம்மாநிலத்தின் துணை நிலை ஆளுநராக முன்னாள் காவல்துறை அதிகாரியான கிரண்பேடி நியமிக்கப்பட்டார். அன்று முதல் மாநிலத்தில் யாருக்கு அதிக அதிகாரம், என்று இருவரும் மோதி வருகின்றனர்.
ஆகவே புதுச்சேரி அதிகாரிகள் 'நித்யகண்டம் பூரண ஆயுசு' என்றே நாள்களை கடத்தி வருகின்றனர். இந்த நிலையில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கே அதிக அதிகாரம் என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்து விட்டது. இப்போது அந்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார் கிரண்பேடி. வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் அதிக அதிகாரம் ஆளுனருக்குத்தான் என்பதை ஏற்க மறுத்துவிட்டது.
ஆளுநர்- முதல்வர் சண்டை
ஆனால் வழக்கு இன்னமும் முடிவுக்கு வரவில்லை. இப்படியாக ஆளுநருக்கும் முதல்வருக்கும் ‘நாளொரு சச்சரவும் பொழுதொரு சண்டையுமாக' நாள்கள் நகர்ந்து கொண்டிருக்கின்றன. அரசாள்வதில் சண்டையிட்டு வந்த இருவரும் இப்போது வாட்ஸ் ஆப் குழுவிலும் மோதிக்கொள்ள ஆரம்பித்துள்ளனர்.
கோயில் தேரோட்டம்
புதுச்சேரியில் ஆளுநர் கலந்து கொள்ளும் நிகழ்வுகளை முதல்வர் நாராயணசாமி தவிர்த்து வருகிறார். அதுபோல முதல்வரின் நிகழ்வுகளை ஆளுநர் கிரண்பேடி தவிர்த்து வருகிறார். இந்த நிலையில் வில்லியனூரில் உள்ள சோழ திருக்காமேஸ்வரர் கோயில் திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த விழாவில், விழா மரபுப்படி கோயில் தேரோட்டத்தை துணைநிலை ஆளுநரும் முதல்வரும் சேர்ந்து துவக்கி வைப்பது வழக்கம். ஆகவே முதல்வரும் ஆளுநரும் இந்த விழாவில் கலந்து கொண்டனர். இருந்தாலும் இருவரும் பாராமுகத்துடனேயே தேரோட்டத்தை துவக்கி வைத்தனர்.
முதல்வர் அனுப்பியது
வழக்கமாக ஆளுநர் மற்றும் முதல்வர் கலந்து கொள்ளும் நிகழ்வுகளுக்கான புகைப்படங்கள் மற்றும் செய்திக் குறிப்புகளை ஊடகங்களுக்கு அனுப்பி வைப்பது வழக்கம். இதில் முதல்வர் தரப்பில் இருந்து ஊடகங்களுக்கு அனுப்பிய செய்திகளில் ஆளுநரின் படமோ அல்லது அவரது பெயரோ இடம்பெறவில்லை.
ஆளுநர் அனுப்பியது
அதுபோல ஆளுநர் தரப்பில் இருந்து ஊடகங்களுக்கு அனுப்பப்பட்ட செய்தியில் முதல்வரின் படமோ அவரது பெயரோ இடம்பெறவில்லை. அறிக்கைகளில், அரசாள்வதில் நடந்து வந்த மோதல் இப்போது வாட்ஸ் ஆப் குழுவிலும் தீவிரமாக தொடர்ந்து வருகிறது. இதனால் அதிகாரிகள் எப்போதுதான் இவர்கள் பஞ்சாய்த்து முடியும் என கவலையில் உள்ளார்கள்.