விற்பனைக்கு வந்த அரிய வகை பறவைகள்.. புதுவையில் பறிமுதல்.. அதிகாரிகள் வார்னிங்!
புதுச்சேரி: புதுச்சேரியில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த கொக்கு, கிளி, மைனா உள்ளிட்ட 100 க்கும் மேற்பட்ட பறவைகளை வனத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
புதுச்சேரி பாதுகாக்கப்பட்ட பறவைகளை வேட்டையாடி விற்பனை செய்வதை தடுக்க வனத் துறையினர் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இப்பணியில் வனத்துறை ஊழியர்கள் மட்டுமின்றி 50 க்கும் மேற்பட்ட வன ஆர்வலர்களும் ஈடுபட்டு வருகின்றனர். வனத்துறை தீவிர நடவடிக்கை எடுத்தாலும், பறவைகள் தொடர்ந்து வேட்டையாடப்பட்டு வரும் நிலைதான் புதுச்சேரியில் இருந்து வருகிறது.
இந்நிலையில் புதுச்சேரி அருகே உள்ள ஒதியம்பட்டு, கூடப்பாக்கம் உள்ளிட்ட கிராமப் பகுதிகளில் பறவைகள் விற்பனைக்காக வைக்கப்பட்டிருப்பதாக வனத்துறைக்கு தகவல் கிடைத்தது.
இதனையடுத்து அங்கு சென்ற வனத்துறையினர், அங்கு சாலையோரத்தில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த, 30 க்கும் மேற்பட்ட கொக்குகள், பச்சை கிளிகள், நொல்ல மடையான், மைனா உள்ளிட்ட பறவைகளை கைப்பற்றினர். மேலும் வனத்துறை அதிகாரிகள் வருவதை முன்கூட்டியே தெரிந்துகொண்ட பறவை வியாபாரிகள், அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். அவர்களை வனத்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
சமூக விரோதிகள் பாதுகாக்கப்பட்ட பறவைகளை வேட்டையாடி விற்பனை செய்தாலும், அவற்றை பொதுமக்கள் வாங்கக் கூடாது என வனத்துறை அறிவுறுத்தியுள்ளது. இதையும் மீறி பறவைகளை வேட்டையாடுபவர்கள் மற்றும் அவற்றை உணவிற்காக வாங்குபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறை எச்சரித்துள்ளது. மேலும் பறவைகளை வேட்டையாடுபவர்களுக்கு 7 வருடம் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.