பாஜக டெபாசிட் இழந்த கட்சி... அவங்களோட சேருபவர்களுக்கு பூஜ்ஜியம்தான் கிடைக்கும் - நாராயணசாமி!
புதுச்சேரி: அதிகார பலம், பணபலத்தை பயன்படுத்தியும், காங்கிரஸ் கட்சியில் இருந்து சில துரோகிகள் மூலம் ஆட்சியை கவிழ்த்தனர் என்று புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி தெரிவித்தார்.
Recommended Video
பாஜனதா டெபாசிட் இழந்த கட்சி. பா.ஜன தாவுடன் சேர்பவர்களும் இத்தேர்தலில் காணாமல் போவார்கள் என்று அவர் கூறினார்.
பாஜக அரசு சதித்திட்டம் தீட்டி புதுவையில் ஆட்சியை கவிழ்த்து விட்டதாக கூறி காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் புதுவையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன.
புதுச்சேரி அரசு கவிழ்ந்தது
புதுச்சேரியில் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஒரு திமுக சட்டமன்ற உறுப்பினர் என 6 பேர் தங்கள் எம்.எல்.ஏ. பதவியை அடுத்தடுத்து ராஜினாமா செய்ததால் காங்கிரஸ் அரசு பெரும்பான்மையை இழந்தது. முதலமைச்சர் நாராயணசாமி தனது ராஜினாமா கடிதத்தை வழங்கினார். அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சி விரைவில் அமலாகும் என்று தெரிகிறது.
காங்கிரஸ் போராட்டம்
இந்த நிலையில் மத்திய பாஜக அரசு சதித்திட்டம் தீட்டி புதுவையில் ஆட்சியை கவிழ்த்து விட்டதாக கூறி காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் புதுவையில் ஆர்ப்ட்டத்தில் ஈடுபட்டன. புதுவை முன்னாள் முதல்வர் நாராயணசாமி, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், எம்.பி. ரவிக்குமார் உள்ளிட்ட பலர் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் நாராயணசாமி பேசியதாவது:-
பாஜகவின் ஜனநாயக படுகொலை
21 கட்சிகள் இணைந்து மத்தியில் உள்ள பாசிச மதவாத சக்தியான பா.ஜனதா கட்சி புதுவை மாநிலத்தில் காங்கிரஸ், தி.மு.க. மதச்சார்பற்ற கூட்டணி கட்சிகளின் ஆட்சியை கவிழ்த்துள்ளதை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்துகிறோம். திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் உள்பட இந்தியா முழுவதும் நமக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். ஜனநாயக படுகொலையை இந்தியாவில் மட்டுமல்ல, எல்லா மாநிலங்களிலும் பா.ஜனதா அரங்கேற்றி உள்ளது.
துரோகிகளின் பங்கு
அருணாச்சல பிரதேசம், மணிப்பூர் மாநிலங்களில் குதிரை பேரம் செய்து எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்கி ஆட்சி கவிழ்ப்பு செய்துள்னர். கர்நாடகாவில் பல ஆயிரம் கோடி பேரம் பேசி ஆட்சி மாற்றம் செய்தனர். புதுவையில் 5 ஆண்டுகளை நாம் நிறைவு செய்துவிட்டோம். 10 நாட்களே தேர்தல் தேதி அறிவிப்புக்கு உள்ளது.அதிகார பலம், பணபலத்தை பயன்படுத்தியும், காங்கிரஸ் கட்சியில் இருந்து சில துரோகிகள் மூலம் ஆட்சியை கவிழ்த்தனர்.
முடிந்தால் மிரட்டி பாருங்கள்
புதுவை அரசுக்கு தொல்லை கொடுக்க திட்டமிட்டு கவர்னர் கிரண்பேடியை அனுப்பி வைத்தார்கள். எங்களை நிம்மதியாக ஆட்சி செய்யவிடவில்லை. பாஜனதா டெபாசிட் இழந்த கட்சி. பா.ஜன தாவுடன் சேர்பவர்களும் இத்தேர்தலில் காணாமல் போவார்கள்.பா.ஜனதா, என்.ஆர்.காங்கிரஸ், அ.தி.மு.க. கூட்டணிக்கு வருகிற தேர்தலில் மக்கள் பூஜ்யத்தைத்தான் கொடுப்பார்கள். இதேநிலைதான் நாளை ரங்கசாமிக்கு ஏற்படும். யார், யாரையோ மிரட்டுகின்றனர். என்னை மிரட்டி பாருங்கள். கொள்கையும், கோட்பாடும் இல்லாதவர்கள்தான் மிரட்ட லுக்கு அடிபணிவார்கள் என்று நாராயணசாமி பேசினார்.