புதுவை: நாராயணசாமி ஆட்சியை கவிழ்த்த 2 மாஜி எம்.எல்.ஏ.க்கள் அமித்ஷா முன்னிலையில் பாஜகவில் ஐக்கியம்
புதுச்சேரி: முதல்வர் நாராயணசாமி ஆட்சி கவிழ முக்கிய காரணமாக இருந்த முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் ஜான்குமார், வெங்கடேசன் ஆகியோர் இன்று பாஜகவில் இணைந்தனர்.
சட்டமன்ற தேர்தல் விளையாட்டுகள் புதுச்சேரியில் தமிழகத்துக்கு முன்பே தொடங்கிவிட்டன. புதுச்சேரி மாநில காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவரும், அம்மாநில அமைச்சருமான நமச்சிவாயம் (வில்லியனூர் தொகுதி), தீப்பாய்ந்தான் (ஊசுடு தொகுதி) ஆகிய இருவரும் தங்களது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தனர். இதில் நமச்சிவாயம் பாஜகவில் இணைந்தார்.
இதைத் தொடர்ந்து, புதுச்சேரி காமராஜ் நகர் காங்கிரஸ் எம்.எல்.ஏ ஜான்குமார் தனது பதவியை கடந்த பிப்.16ம் தேதி ராஜினாமா செய்திருந்தார்.
இதனால், நாராயணசாமி அரசுக்கு பெரும்பான்மை இல்லை என எதிர்க்கட்சிகள் கூறிய நிலையில், முதலமைச்சர் நாராயணசாமி பிப்.22 அன்று சட்டசபையில் மெஜாரிட்டியை நிரூபிக்க வேண்டும் என்று பொறுப்பு ஆளுநர் தமிழிசை உத்தரவிட்டார்.
தீர்மானத்தை முன்மொழிந்து ஒரு மணி நேரத்துக்கும் மேலாக உரையாற்றிய முதல்வர் நாராயணசாமி மத்திய அரசு மற்றும் முன்னாள் துணைநிலை ஆளுநர் கிரண்பேடியைக் கடுமையாக விமர்சித்தார்.
பாஜக நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை உள்ளதால் எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்ற வகையில் ஆட்சிக் கவிழ்ப்பில் ஈடுபடுவதாக விமர்சித்தார். முதல்வர் உரை முடிந்தவுடன் அவருடன் திமுக, காங்கிரஸ் உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். இதனால், சட்டப்பேரவையில் நம்பிக்கை கோரும் தீர்மானம் நிறைவேறவில்லை என சபாநாயகர் சிவக்கொழுந்து அறிவித்தார்.
இதனையடுத்து, புதுச்சேரியில் 4 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்துவந்த முதல்வர் நாராயணசாமி தலைமையிலான ஆட்சி கவிழ்ந்தது. தற்போது அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சி நடைபெற்று வருகிறது.
இதில், வெங்கடேசன் வைத்த ட்விஸ்ட்டில் தான், பதவியை இழந்தார் நாராயணசாமி. நம்பிக்கை வாக்கெடுப்புக்கு சில மணி நேரங்களே இருந்த நிலையில், திமுக எம்.எல்.ஏ வெங்கடேசன் ராஜினாமா செய்ய, திமுக தலைமையே அதிர்ந்துவிட்டது. இதையடுத்து, கட்சியின் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் நடந்து கொண்டதால், அனைத்து பொறுப்புகளில் இருந்தும் வெங்கடேசன் இடைநீக்கம் செய்யப்படுவதாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்தார்.
4 மணி நேரத்தில் நிரம்பிய நீட் தேர்வு மையங்கள் தமிழ் தேர்வர்கள் திணறல் - சு. வெங்கடேசன் எம்.பி கடிதம்
இந்த நிலையில் இன்று பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள புதுவைக்கு வந்த அமித்ஷா முன்னிலையில் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் ஜான்குமார் மற்றும் வெங்கடேசன் ஆகிய இருவரும் பாஜகவில் இணைந்தனர். இருவரும் பாஜக சார்பில் வரும் புதுவை சட்டமன்ற தேர்தலில் களம் காணவிருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.