சொத்தெல்லாம் உன் தம்பிக்குத்தான்.. உஷாரா இரு.. ஓதிய மனைவி.. கொலையில் முடிந்த குடும்ப சண்டை!
புதுச்சேரி: புதுச்சேரியில் சொத்து தகராறில் மகனை கொலை செய்த வழக்கில் தாய், தந்தை உள்ளிட்ட நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்.
புதுச்சேரி வீராம்பட்டினம் வ.உ.சி நகரை சேர்ந்தவர் குமார். இறால் மீன்களை மொத்த வியாபாரம் செய்து வருகிறார். மேலும் வட்டிக்கு விடும் தொழிலும் செய்து வருகிறார்.
இவரது மனைவி அன்னக்கொடி. இவர்களுக்கு ரஞ்சித்குமார் மற்றும் செந்தில்குமார் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். இரண்டு மகன்களுக்கும் திருமணமாகிவிட்டது. மூத்த மகன் ரஞ்சித் பிரான்சில் வசிக்கும் மீனா என்பவரை திருமணம் செய்துக்கொண்டு பிரான்ஸ் சென்று அங்கேயே வசித்து வந்தார். இவர்களுக்கு குழந்தைகள் இல்லை.
இதனிடையே கடந்த சில நாட்களுக்கு முன்னர் பிரான்சில் இருந்து புதுச்சேரி வந்த ரஞ்சித்குமார், நேற்று முன்தினம் தனது வீட்டில் கைகால்களை கட்டி, அடித்து கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுகுறித்து அரியாங்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் தந்தை குமார், தாய் அன்னகொடி, ஆகியோர் கொலை செய்தது தெரியவந்தது.
இதற்கு மறைமுக உடந்தையாக செந்தில்குமார் மற்றும் அவர்களது இறால் பண்ணையில் வேலை செய்யும் செல்வம் ஆகியோர் இருந்துள்ளனர். இதனயைடுத்து 4 பேரையும் அரியாங்குப்பம் போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த கொலை குறித்து பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.
வேலை செய்த குமார்
இறால் மற்றும் மீன் மொத்த வியாபாரம் செய்து வரும் குமார், புதுச்சேரியில் ஏற்றுமதி இறக்குமதியில் முதலிடத்தில் இருந்து வருகிறார். இவரது 2 மகன்களும் இவரிடமே இருந்து தொழில் செய்து வந்துள்ளனர். இதில் 5 ஆண்டுகளுக்கு முன்னர் பிரான்ஸ் பெண்ணை திருமணம் செய்துக்கொண்டு ரஞ்சித் பிரான்ஸ் சென்றுவிட்டார். செந்தில்குமார் மட்டும் தந்தைக்கு உதவியாக இருந்து தொழிலை கவனித்து வந்துள்ளார். பிரான்சில் சரியான வேலை இல்லாமல் இருந்த ரஞ்சித் அடிக்கடி புச்சேரி வந்து செல்வது வழக்கம்.
உஷாராக இரு
அப்போது அவரிடம் உறவினர்கள் சிலர் உன் தம்பி தந்தையுடனேயே இருந்து தொழிலை கவனித்து வருவதால் சொத்துக்கள் எல்லாம் அவனுக்குத்தான் செல்லும். உனக்கு குழந்தைகள் வேறு இல்லை. எனவே உஷாராக இருந்துக்கொள் என கூறியுள்ளனர். ரஞ்சித்தின் மனைவி மீனாவும் இதனையே கூறியுள்ளார். எனவேதான் ரஞ்சித் புதுச்சேரிக்கு அடிக்கடி வந்து சென்றுள்ளார்.
பெற்றோரிடம் சண்டை
இதனிடையே கடந்த சில நாட்களுக்கு முன்னர் புதுச்சேரி வந்த ரஞ்சித்குமார், இந்த முறை சொத்துக்களை தனது பெயரில் எழுதி வைக்கும்படி கேட்டுள்ளார். ஆனால் குமார் அதற்கு மறுத்து வந்துள்ளார். எனவே தினமும் ரஞ்சித் தனது குடும்பத்தினருடன் சண்டை போடுவதை வாடிக்கையாகவே கொண்டிருந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு அளவுக்கு அதிகமாக குடித்துவிட்டு சொத்துக்களை தனது பெயரில் எழுதி வைக்க வேண்டும் என தனது பெற்றோர்களிடம் சண்டை போட்டுள்ளார்.
கட்டினார்கள்
உடனே அவரது தாய் அன்னகொடி, தனது செல்போன் மூலம் தனது மற்றொரு மகனுக்கு தகவல் தெரிவித்துள்ளார். இறால் பண்ணையில் உள்ள செந்தில்குமார் அங்கு வேலை செய்யும் செல்வம் என்பவரை துணைக்கு அழைத்துக்கொண்டு வீட்டிற்கு வந்துள்ளார். வீட்டில் ரஞ்சித் குடிபோதையில் தாறுமாறாக பேசி வீட்டில் இருந்த பொருட்களை உடைத்துள்ளார். இதனால் செந்தில்குமாரும், செல்வமும் இணைந்து ரஞ்சித்தின் கை, கால்களை அங்கிருந்து துணியால் கட்டியுள்ளனர். போதையில் இருந்த ரஞ்சித் சிறிது அமைதியாகியுள்ளார்.
ரஞ்சித் சாவு
இதனிடையே போதை தெளிந்த ரஞ்சித் தனது கை, கால்களை அவிழ்த்துவிடுமாறு கூறி சத்தம் போட்டுள்ளார். ஏற்கனவே மகன் மீது ஆத்திரத்தில் இருந்த குமார் அருகில் இருந்த இரும்பு தடியால் தனது மகனை சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். கொலைக்கு உடந்தையாக அன்னக்கொடியும் இருந்துள்ளார். கொலை செய்ததற்காக தாய் தந்தையரையும், மறைமுக உடந்தையாக இருந்ததற்காக செந்தில்குமார் மற்றும் செல்வத்தையும் போலீசார் கைது செய்துள்ளனர். இதனிடையே கொலை செய்யப்பட்ட ரஞ்சித்தின் தாய், தந்தை, சகோதரர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளதால் ரஞ்சித்தின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அரசு மருத்துவமனையின் சவகிடங்கில் வைக்கப்பட்டுள்ளது. அவரது மனைவி மீனா பிரான்சில் இருந்து வந்தவுடன் அவரிடம் உடல் ஒப்படைக்கப்பட்டு இறுதி சடங்கு செய்யப்பட உள்ளது.