பிரான்ஸ் தேசிய தினம் இன்று... புதுச்சேரியில் 'பளிச்' விளக்குகளுடன் உற்சாக கொண்டாட்டம்
புதுச்சேரி: புதுச்சேரியில் பிரான்ஸ் நாட்டு தேசிய தினம் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. வண்ண, வண்ண விளக்குகளுடன் வீதிகளில் ஊர்வலமும் நடைபெற்றது.
பாரீஸ் நகரில் உள்ள பஸ்தி என்ற சிறைச்சாலை மக்கள் புரட்சி மூலம் தகர்க்கப்பட்டு, கடந்த 1789-ம் ஆண்டு ஜூலை 14-ம் தேதி மன்னராட்சி தூக்கி எறியப்பட்டது. இந்த தினம் பிரான்ஸ் நாட்டு தேசிய தினமாக கொண்டாடப்படுகிறது. மேலும் அக்காலத்தில் மின்சாரம் இல்லாததால் மக்கள் தீப்பந்தம் ஏந்தி புரட்சி செய்து வென்றனர்.
இத்தினத்தை நினைவு கூறும் வகையில், பிரெஞ்சு குடியுரிமை பெற்றவர்கள் வாழும் அனைத்து நகரங்களிலும் பேரணி, தீப்பந்த ஊர்வலம் நடைபெறும். அதன் ஒரு பகுதியாக புதுச்சேரியிலும் மின் விளக்குகளைக் கொண்டு ஊர்வலம் நடைபெற்றது.
அந்தவகையில், பிரான்ஸ் நாட்டின் ஆதிக்கத்திலிருந்து விடுபட்ட புதுச்சேரியிலும் பிரான்ஸ் தேசிய தினம் வருடந்தோறும் ஜீலை 14 ஆம் தேதி உற்சாகத்துடன் கொண்டாடப்படுவது வழக்கம். இன்று பிரான்ஸ் நாட்டின் 230 ஆவது தேசிய தினத்தையொட்டி புதுச்சேரி கடற்கரை சாலையில் உள்ள பிரஞ்சு போர்வீரர் நினைவுச் சின்னத்தில் இருநாட்டு தேசிய கொடிகள் ஏற்றப்பட்டு, போரின்போது உயிர் நீத்த ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
இதில் பிரெஞ்சு தூதரக அதிகாரி கேத்தரின் சுவார்ட், புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் அருண், முன்னாள் இராணுவ வீரர்கள் மற்றும் பிரெஞ்சு குடியுரிமை பெற்றவர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டு போர் வீரர்கள் நினைவு சின்னத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். நிகழ்ச்சியில் பிரஞ்சு மற்றும் இந்திய தேசிய கீதங்களும் இசைக்கப்பட்டது. இன்று மாலை புதுச்சேரி கடற்கரை சாலையில் வாணவேடிக்கை நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.