கொரோனாவிலும் ஓயாத சண்டை.. வேற யாரு கிரண்பேடி, நாராயணசாமிதான்.. மக்கள் வேதனை!
புதுச்சேரி: புதுச்சேரியில் கொரோனா நிவாரணமாக ஏழை குடும்பங்களுக்கு அரிசி வழங்கும் விவகாரத்தில் துணைநிலை ஆளுநர் கிரண்பேடிக்கும் - முதலமைச்சர் நாராயணசாமிக்கும் மீண்டும் மோதல் எழுந்துள்ளது.
Recommended Video
புதுச்சேரி மாநில துணைநிலை ஆளுநர் கிரண்பேடிக்கும் - முதலமைச்சர் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசுக்கும் ஆரம்பம் முதலே மோதல் இருந்து வருவது அனைவரும் அறிந்ததே. ஆனால் தற்போது கொரோனாவின் பிடியில் மக்கள் சிக்கி தவித்து வரும் இந்த இக்கட்டான நேரத்தில்கூட, மக்களைப்பற்றி யோசிக்காமல் இருவரும் ஒருவர் மீது ஒருவர் குற்றம்சாட்டி, சண்டை போட்டு வருகின்றனர்.
மத்திய அரசின் திட்டத்தில் புதுச்சேரி மாநிலத்தில் வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள மஞ்சள் அட்டைதாரர்களுக்கு அரிசி கொடுப்பதை தடுத்து நிறுத்தும் வேலையை துணைநிலை ஆளுநர் கிரண்பேடி செய்து வருவதாகவும், இதில் பிரதமர் மோடி தலையிட வேண்டுமென முதலமைச்சர் நாராயணசாமி பிரதமருக்கும், உள்துறை அமைச்சருக்கும் கோரிக்கை விடுத்திருந்திருந்தார்.
இந்நிலையில் ஆளுநர் கிரண்பேடி இதை மறுத்து விளக்கமளித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள விளக்க கடிதத்தில், பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் ஆகியோரிடம் அரிசி வழங்க ஆளுநர் தடையாக உள்ளார் என முதல்வர் நாராயணசாமி மீண்டும் பொய் கூறியுள்ளார். வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும் மக்களுக்கு அரிசி, பருப்பு வழங்க ஏற்கனவே ஏற்பாடுகள் செய்யப்பட்டுவிட்டது. வறுமைக்கோட்டிற்கு மேல் வாழும் மக்களுக்கும் அரிசி வழங்க வேண்டுமென சட்டமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தியுள்ளதால் இந்த கோரிக்கை அரசின் பரிசீலனையில் உள்ளது.
இது தொடர்பான எந்த கோப்பும் ராஜ்நிவாஸில் இல்லை. இதில் ஆளுநர் எங்கு வந்து தலையிட்டார்? புதுவை முதல்வர் தொடர்ந்து பொய் கூறுவது துரதிர்ஷ்டவசமானது. இதன்மூலம் முதல்வர் தனது பதவியின் மீதான மரியாதையையும், நம்பிக்கையையும் சீர்குலைத்து வருகிறார். மக்களின் ஆரோக்கியம், பாதுகாப்பை உறுதி செய்ய பல்வேறு நடவடிக்கை எடுக்கும்போது நம்பிக்கையையும் தக்க வைப்பது அவசியம். உண்மையான நிலை குறித்து மத்திய அரசுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
உலகையே கொரோனா வைரஸ் அச்சுறுத்தி வரும் நிலையில், புதுச்சேரியிலும் 8 பேர் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு, அதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். கொரோனாவால் அமலில் உள்ள ஊரடங்கு உத்தரவால், மக்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வரும் நிலையில், ஆளுநரும் - முதலமைச்சரும் இணைந்து மக்கள் பணியாற்றாமல், சண்டைபோட்டுகொள்வது புதுச்சேரி மக்களை வேதனையடையச் செய்துள்ளது.