கிரண்பேடிக்கு என்ன கொம்பு முளைச்சிருக்கா…? நான் கேக்குறேன்..! சீறிய நாராயணசாமி
Recommended Video
புதுச்சேரி:மக்கள் நலத்திட்டங்கள் தொடர்பான 39 கோரிக்கைகளுக்கு பதில் அளிக்க முடியாமல் ஆளுநர் கிரண்பேடி ஓடி ஒளிந்து விட்டதாகவும்.... அவருக்கு கொம்பு முளைத்திருக்கிறதா என்றும் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி காட்டமாக விமர்சித்துள்ளார்.
மக்கள் நலன் தொடர்பான 39 கோப்புகளுக்கு துணைநிலை ஆளுநர் கிரண்பேடி ஒப்புதல் அளிக்க கோரி முதல்வர் நாராயணசாமி ஆளுநர் மாளிகை முன்பு தொடர் தர்ணாவில் ஈடுபட்டு வருகிறார். அவருடன் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் உள்ளிட்டோரும் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
நாராயணசாமி கருப்பு சட்டையுடனும், அமைச்சர்கள், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கருப்பு துண்டும் அணிந்து 5 நாட்களாக தர்ணாவில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் போராட்டத்தின் ஒரு பகுதியாக நாராயணசாமி தமது வீட்டில் கருப்புக் கொடியையும் ஏற்றி இருக்கிறார்.
ஆளுநரை எதிர்த்து போராட்டம்
இதேபோல் காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சிகளின் அலுவலகங்களிலும் கருப்பு கொடி ஏற்றி ஆளுநருக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இது குறித்து முதல்வர் நாராயணசாமி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
கருப்புக்கொடியேற்றம்
இன்றைய தினத்தில் மதச்சார்பற்ற தலைவர்களும், தொண்டர்களும், தங்களது வீட்டில் கருப்புக் கொடி ஏற்ற வேண்டும் என்று நேற்று முடிவு செய்யப்பட்டது. அதன் படி இன்று காலை 9 மணி அளவில் எங்களது வீட்டில் கருப்பு கொடி ஏற்றப்பட்டது.
கிரண்பேடி சர்வாதிகாரம்
கருப்பு தினம் அனுசரிக்க வேண்டிய நிலையை கிரண்பேடி ஏற்படுத்திவிட்டார். மத்தியில் இருந்து நிதி வந்தால் அதை தடுத்து திருத்துவது, மக்களுக்கு நிவாரணம் கொடுத்தால் அதற்கு தடையாக இருப்பது, சர்வாதிகார ஆட்சியை புதுச்சேரி மாநிலத்தில் நடத்த அவர் முயற்சிக்கிறார்.
கிரண்பேடியே திரும்பிப்போ
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை கிரண்பேடி உதாசீனப்படுத்திவிட்டார். கிரண்பேடியை திரும்பிப்போ என்று வலியுறுத்தி நாளை ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பும் போராட்டம் நடத்தப்பட உள்ளது. 20-ம் தேதி சிறை நிரப்பும் போராட்டம், 21-ம் தேதி உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் என்றார்.