தெலுங்கானா புதுச்சேரியில் இரு மாநிலங்களுலும் குடியரசு தினத்தன்று தேசிய கொடியேற்றும் ஆளுநர் தமிழிசை
புதுச்சேரி : குடியரசு தின விழாவையொட்டி தெலுங்கானா மற்றும் புதுச்சேரி ஆகிய இரு மாநிலங்களிலும் அம்மாநிலங்களின் ஆளுநரான தமிழிசை சௌந்தரராஜன் தேசியக்கொடி ஏற்ற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியா முழுவதும் வரும் 26ம் தேதி குடியரசு தின விழா வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது. இதற்கான முன்னேற்பாடுகள் தற்போது இருந்தே செய்யப்பட்டு வரும் நிலையில் குடியரசு தின விழாவுக்காக டெல்லி செங்கோட்டை தயாராகி வருகிறது.
நாடு முழுவதும் சுதந்திர தின விழாவின்போது அந்தந்த மாநில முதல்வர்களும், குடியரசு தின விழா கொண்டாட்டங்களின் போது அந்தந்த மாநிலங்களின் ஆளுநர்கள் தேசியக் கொடியை ஏற்றுவது வழக்கம்.
இந்த நிலையில் தற்போது தெலுங்கானா மற்றும் புதுச்சேரி மாநில துணை நிலை ஆளுநர் ஆக பொறுப்பு வகித்து வரும் தமிழிசை ஏதாவது ஒரு மாநிலத்தில் கொடியேற்ற இருப்பதாக தகவல் வெளியானது. கடந்த 2014ஆம் ஆண்டு புதுச்சேரி துணைநிலை ஆளுநர் பொறுப்பை கூடுதலாக வகித்த அந்தமான் ஆளுநர் ஏ.கே.சிங் அந்தமானில் தேசிய கொடியேற்றிய நிலையில் அப்போது புதுச்சேரி முதல்வராக இருந்த ரங்கசாமி தேசியக் கொடியை ஏற்றினார். இதேபோல கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தமிழக முதலமைச்சராக இருந்த ஓ பன்னீர்செல்வம் அவர்களும் குடியரசு தினத்தன்று தமிழகத்தில் தேசியக் கொடியை ஏற்றினார்.
இந்த நிலையில் தெலுங்கானாவின் ஆளுநராக இருக்கும் தமிழிசை சௌந்தர்ராஜன் அந்த மாநிலத்தில் கொடியேற்ற அதிக வாய்ப்பு இருப்பதாகவும் , புதுச்சேரியில் தற்போதைய முதலமைச்சர் ரங்கசாமி தேசியக் கொடி ஏற்ற வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது.
இந்த நிலையில் தெலுங்கானா புதுச்சேரி ஆகிய இரு மாநிலங்களிலும் ஆளுநர் தமிழிசையே தேசியக் கொடி ஏற்றுவார் என தகவல்கள் வெளியாகி உள்ளது. இருபத்தி ஆறாம் தேதி புதுச்சேரியில் காலை 7 மணிக்கே குடியரசு தின விழா நிகழ்ச்சி தொடங்கும் நிலையில் 8 மணிக்குள் புதுச்சேரி நிகழ்ச்சிகளை முடித்துவிட்டு ஆளுநர் தமிழிசை தெலுங்கானா புறப்பட்டுச் சென்று அங்கும் தேசியக் கொடி ஏற்றுவார் என தகவல்கள் வெளியாகி உள்ளது.
ஆளுநர்கள் பாஜகவின் ஒற்றர்களாக செயல்படுகின்றனர் - இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முத்தரசன் பகீர் புகார்