15 நாட்களுக்கு பிறகு மீண்டும் ஓடும் அரசு பேருந்துகள்.. அத்தியாவசிய பணியில் உள்ளோருக்காக மட்டும்!
புதுச்சேரி: புதுச்சேரியில் அத்தியாவசிய தேவைகளுக்காக அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.
Recommended Video
சீனாவில் உருவான கொரோனா வைரஸ், தற்போது உலகில் பல்வேறு நாடுகளில் வேகமாக பரவி வருகிறது. இதுவரை உலகம் முழுவதும் 82 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனா வைரஸ் தொற்றால் பலியாகியுள்ளனர். மேலும் 14 லட்சத்துக்கும் அதிகமானோர் வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் மிகவும் வேகமாக பரவி வருகிறது. கொரோனா வைரஸை பரவுவதை தடுக்க, நாடுமுழுவதும் வரும் 14 ஆம் தேதி வரை 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால் விமானம், ரெயில்கள், பேருந்து, ஆட்டோ உள்ளிட்ட மக்களின் பொது போக்குவரத்து அனைத்தும் முற்றிலுமாக முடக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி மாநிலத்திலும், ஊரடங்கு உத்தரவு கடுமையாக்கப்பட்டுள்ளது. இதனால் அத்தியாவசிய தேவைகளின்றி வெளியே சுற்றி திரிபவர்களை போலீசார் கைது செய்து, அவர்களுடைய வாகனங்களை பறிமுதல் செய்து வருகின்றனர். புதுச்சேரியில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக கடந்த 16 நாளில் 1,819 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
மேலும் தமிழகம் - புதுச்சேரி மாநில எல்லைகளும் மூடப்பட்டுள்ளன. இருந்தபோதிலும் அத்தியாவசிய பணியில் ஈடுபட்டுள்ள அரசு ஊழியர்களை ஏற்றிச் செல்ல புதுச்சேரி அரசின் சாலை போக்குவரத்து கழகம் மற்றும் தமிழக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் ஒரு சில பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
புதுச்சேரி அரசின் சாலை போக்குவரத்து கழகம் சார்பில் துப்புரவு பணியாளர்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பணிக்கு வருபவர்களை கிராமப்புற பகுதியில் இருந்து நகருக்கு அழைத்து வரவும், பின்னர் அவர்களை திருப்பி ஊருக்கு கொண்டு சென்று விடவும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
இதேபோல் தமிழக அரசின் போக்குவரத்து கழகம் சார்பில் புதுச்சேரி புதிய பேருந்து நிலையத்திலிருந்து பேருந்துகள் இயக்கப்படுகிறது. இந்த பேருந்தில் கிருமாம்பாக்கம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் பணிபுரியும் ஊழியர்கள், கடலூர் அரசு மருத்துவமனை ஊழியர்கள், சிதம்பரம் அரசு மருத்துவமனை ஊழியர்கள், நியாயவிலைக் கடை ஊழியர்கள் என அத்தியாவசிய பணியில் ஈடுபட்டுள்ளவர்கள் மட்டும் அழைத்துச் செல்லப்படுகின்றனர்.
மேலும் அவர்கள், அடையாள அட்டைகளை காட்டிய பின்னரே பேருந்திற்குள் அனுமதிக்கப்படுகின்றனர். மாலையிலும் அவர்கள் பணி முடிந்து திரும்பும் வகையில் சிதம்பரத்தில் இருந்து புதுச்சேரிக்கு தமிழக அரசு பேருந்துகள் இயக்கப்படுகிறது.