திருமண வீட்டில் புகுந்த கொள்ளையர்கள்.. பணம், நகை அபேஸ்
Recommended Video
புதுச்சேரி: புதுச்சேரியில் அரசு பெண் ஊழியரின் வீட்டில் புகுந்த கொள்ளையர்கள் நகை, பணத்தை திருடிச் சென்றனர்.
புதுச்சேரி அரியாங்குப்பம் சுப்பையா நகரை சேர்ந்தவர் பிரேமா. இவர் புதுச்சேரி அரசின் கல்வித்துறையில் கண்காணிப்பாளராக பணியாற்றி வருகின்றார். இவருக்கு 2 மகள்கள் உள்ளனர்.
மூத்த மகளுக்கு ஏற்கனவே திருமணம் செய்திருந்த நிலையில், இரண்டாவது மகளுக்கு திருமணம் நிச்சயக்கப்பட்டு திருமண வரவேற்பு விழா அப்பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்றது. அதில் பங்கேற்பதற்காக பிரேமாவின் குடும்பத்தினர் அனைவரும் திருமணமண்டபத்திற்கு சென்றிருந்தனர்.
வரவேற்பு முடிந்து வீடு திரும்பியபோது, வீட்டின் கதவு திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் வைத்திருந்த 3.50 பவுன் தங்க நகை, மற்றும் 4 லட்சம் ரூபாய் ரொக்க பணம் கொள்ளையடிக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
உடனடியாக இதுகுறித்து அரியாங்குப்பம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அந்த வீட்டின் ஒரு பகுதியில் உள்ள ஆஸ்பெஸ்டாஸ் ஷீட்டை உடைத்து மர்ம நபர்கள் உள்ளே புகுந்திருப்பதும், அங்கே இருந்த கடப்பாரையை எடுத்து வீட்டின் முன்பக்க கதவை உடைத்து திறந்து உள்ளே சென்று பீரோவை உடைத்து அதில் இருந்த நகை மற்றும் பணத்தை திருடிச் சென்றிருப்பதும் தெரியவந்தது.
பின்னர் போலீசார் இது குறித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து, திருட்டு சம்பவம் தொடர்பாக 3 பேரை சந்தேகத்தின் பேரில் போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கல்வித்துறை அதிகாரி வீட்டின் மேற்கூரையை உடைத்து நகை மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் புதுச்சேரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.