700 துணி பைகளை கொண்டு கிறிஸ்துமஸ் குடில்.. ஆசிரியர் அசத்தல்!
புதுச்சேரி: பிளாஸ்டிக் பைகளை தவிர்த்து, துணி பைகளை பயன்படுத்த வலியுறுத்தி அரசு பள்ளி ஆசிரியர் ஒருவர் 700 துணி பைகளை கொண்டு கிறிஸ்துமஸ் குடில் செய்து அசத்தியுள்ளார்.
புதுச்சேரி அரியாங்குப்பம் சாமிநாத நாயக்கர் வீதியில் வசிப்பவர் சுந்தரராசு. இவர் நோனாங்குப்பம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நுண்கலை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் ஒவ்வொரு ஆண்டும் வித்தியாசமான முறையில் கிறிஸ்துமஸ் குடில்களை செய்து அசத்தி வருகிறார்.
குறிப்பாக இவரது கிறிஸ்துமஸ் குடில்கள் மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவதாக அமையும். 1 செ.மீ கொண்ட கிறிஸ்துமஸ் குடில், காய்கறியினால் செய்யப்பட்ட குடில், பிளாஸ்டிக் பாட்டில்கள், தேங்காய் நார், 27 வகையான தாணியங்கள், 750 புத்தங்கள் கொண்ட குடில்கள் இவரது படைப்புகளில் சிலவாகும்.
அந்த வகையில் இந்த ஆண்டு 700 துணி பைகளை கொண்டு கிறிஸ்துமஸ் குடில் அமைத்துள்ளார். இந்த குடில் செய்வதற்காக பல்வேறு விழாக்கள், திருமணம், மஞ்சள்நீராட்டு, புதுமனைபுகுவிழா, காதணி விழா, வளைகாப்பு உள்ளிட்ட பல்வேறு விழாக்களில் தாம்பூல பைகளை சேகரித்து குடிலை அமைத்துள்ளார்.
இந்த பைகளை கொண்டு கிறிஸ்துமஸ் மரம், நிலப்பகுதி, மலை மாட்டு தொழுவம், செடி, நட்சத்திரங்கள், தேவதைகள், குடிசைப்பகுதி போன்றவற்றை வடிவமைத்துள்ளார். அதுமட்டுமல்லாது கிறிஸ்துமஸ் தாத்தாவின் முழு உருவத்தையும் துணி பையாலேயே வடிவமைத்துள்ளது தனி சிறப்பாகும்.
புதுச்சேரியில் சுற்றுபுறச் சூழலுக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய பிளாஸ்டிக் பைகளுக்கு அரசு தடை விதித்துள்ள சூழலில், மக்களிடம் துணி பை குறித்த விழிப்புணர்வை இதன் மூலம் அவர் ஏற்படுத்தியுள்ளார். ஆசிரியர் சுந்தராசுவின் இந்த படைப்பை அப்பகுதி மக்கள் கண்டு ரசித்து வருகின்றனர்.