தண்ணி கேன் போட்டது குத்தமா.. தள்ளுவண்டிக்காரரை அடித்த போலீஸ்.. பொதுஜனமும் சேர்ந்து அடித்த பரிதாபம்!
Recommended Video
புதுச்சேரி: புதுச்சேரியில் தள்ளுவண்டியில் சென்ற நபரை போக்குவரத்து காவலர் ஒருவர் நடு ரோட்டில் வைத்து சராமாரியாக தாக்கும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி மரப்பாலம் பகுதியில் ஒருவர் தள்ளு வண்டியில் வாட்டர் கேன்களை வைத்துகொண்டு கடைகளுக்கு சப்ளை செய்துள்ளார். அப்போது அங்குள்ள சாலையோரம் தள்ளு வண்டியை நிறுத்திவிட்டு ஒரு கடைக்கு வாட்டர் கேன்களை சப்ளை செய்துள்ளார்.
சாலையோரம் வண்டியை நிறுத்திவிட்டு சென்றதால் அங்கு பாதுகாப்பு பணியிலிருந்த போக்குவரத்து காவலர் அந்த நபரை நடுரோட்டில் வைத்து சராமாரியாக தாக்குகிறார்.
காவலரை தொடர்ந்து அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த மற்றொரு நபரும் அந்த நபரை சராமாரியாக தாக்குகிறார். இத்தனைக்கும் அந்த பைக் காரர் தனது குழந்தையுடன் வந்துள்ளார். குழந்தையை பைக்கில் உட்காரவைத்து விட்டு வந்து அடிக்கிறார். இவருக்கெல்லாம் அறிவு என்பது சுத்தமாக இல்லையோ என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது.
கைக்குழந்தையை இப்படி விட்டு விட்டு வந்து அடிக்கும் அளவுக்கு வெறி ஏறிப் போய் விட்டதா அந்த முட்டாளுக்கு என்பதே வீடியோவைப் பார்க்கும் பலருக்கும் எழும் கேள்வி. போலீஸ்காரர் கூட அடித்து விட்டு போய் விட்டார். ஆனால் இந்த பைக் காரருக்கு ஏன் இத்தனை வெறித்தனம் என்பதுதான் ஆச்சரியமாக உள்ளது. தற்போது அந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
ஒரு தண்ணீர் கேன் போட்டுவிட்டு வந்த தள்ளுவண்டி காரை இப்படி போலீசும், அவருக்கு சப்போர்ட்டாக இளைஞரும் தாக்கியிருப்பபதற்கு சமூக வலைதளங்களில் பலரும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். அதேநேரம் வாகனங்களை நிறுத்தி போக்குவரத்து நெரிசல் ஏற்படுத்துவது தவறு என்றும் சிலர் கூறியுள்ளார்கள்.