நிவர் புயலால் இடைவிடாமல் வெளுத்தெடுத்தது... கடலூரில் 23 செ.மீ; புதுவையில் 19 செ.மீ. மழை பதிவு
நிவர் புயல் கடலூர், புதுச்சேரியை சூறையாடியது. காற்றுடன் கனமழை கொட்டித்தீர்த்தது.
புதுச்சேரி: நிவர் புயலால் புதுவை, கடலூரில் இடைவிடாமல் கனமழை கொட்டி தீர்த்தது. கடலூரில் 15 மணிநேரத்தில் 23 செ.மீ. மழையும் புதுவையில் 19 செ.மீ மழையும் பதிவானது. புயல் கரையை கடந்த போதும் இடைவிடாமல் கனமழை வெளுத்தெடுத்தது.
நிவர் என்று பெயர் வைக்கப்பட்ட அந்த புயல் அதிதீவிர புயலாக மாறினாலும் புதுச்சேரி அருகே நிதானமாக கரையை கடந்தது. புயல் கரையை கடக்கத் தொடங்கிய நேரத்தில் இருந்த காற்றும், மழையும் பலமாகவே இருந்து. சில மணிநேரங்களிலேயே கொட்டித்தீர்த்த மழையால் புதுச்சேரியின் பல பகுதிகள் வெள்ளக்காடாக மாறின.
மணிக்கு 130 கிலோ மீட்டர் வேகத்தில் சுழன்றடித்த சூறாவளி காற்றினால் பல பகுதிகளில் மரங்கள் முறிந்து விழுந்தன. மின்கம்பங்களும் சாய்ந்தன.
புயலின் கோரத்தாண்டவத்திற்கு புதுச்சேரியில் பாதிப்பு அதிகமாகவே உள்ளது. எங்கும் வெள்ளக்காடாக காணப்படுகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதால் புதுச்சேரி முழுவதும் இருள் சூழ்ந்தது. புயல் கரையை கடந்தாலும் பொதுமக்கள் யாரும் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கடலூர் நகரத்திலும் நிவர் புயல் ஆடிய கோரத்தாண்டவத்தினால் பல பகுதிகள் வெள்ளக்காடாக மாறின. அங்கு மட்டும் 16 செமீ மழை பதிவாகியுள்ளது. முன்னெச்சரிக்கையாக மின்சாரம் துண்டிக்கப்பட்டது. காஞ்சிபுரத்தில் அதீத கனமழை பெய்த காரணத்தால் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. விடிய விடிய வீசிய பலத்த காற்றும் கனமழையும் நகரத்தின் பல பகுதிகளை சிதைத்து விட்டது. பொதுமக்கள் இருளில் சிக்கத் தவித்தனர்.