வதைக்கும் வெயில்.. புதுவையில் பள்ளிகள் திறப்பு தள்ளி வைப்பு.. வேடிக்கை பார்க்கும் தமிழக அரசு
புதுச்சேரி: நாடு முழுவதும் கோடை வெயில் கோர தாண்டவமாடும் நிலையில், கடும் வெயில் காரணமாக புதுவையில் பள்ளிகள் ஜூன் 3-ம் தேதிக்கு பதில் ஜூன் 10-ம் தேதி திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மக்களவை தேர்தல் நடைபெற்றதையொட்டி புதுச்சேரியில் அரசு பள்ளிகளுக்கு முன்கூட்டியே தேர்வுகள் முடிக்கப்பட்டு, கடந்த ஏப்ரல் 12ம் தேதி முதல் விடுமுறை அளிக்கப்பட்டது. வரும் ஜூன் 3ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என புதுவை கல்வித்துறை அறிவித்திருந்தது. இந்நிலையில் தமிழகம் மற்றும் புதுவையில் வெயில் கடுமையாக வாட்டி வதைத்து வருகிறது. அனல் காற்றம் அவப்போது வீசி வருகிறது.
தமிழகத்தில் கூட ஆங்காங்கே கோடை மழை பெய்து வருகிறது. ஆனால் புதுவை மற்றும் காரைக்காலில் கோடை வெப்பம் அனலாக தெறிக்கிறது. புதுச்சேரியில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுவதால், பள்ளிகள் திறப்பு தேதியை நீட்டிக்க வேண்டுமென மாணவர்கள், பெற்றோர்கள், சமூக அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகள் அரசிடம் கோரிக்கை வைத்தன.
இந்நிலையில் பல்வேறு தரப்பிலிருந்து வந்த கோரிக்கையை ஏற்றும், மாணவர்களின் நலன் கருதியும், ஜீன் 3 ஆம் தேதிக்கு பதில் ஜீன் 10 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என புதுவை முதலமைச்சர் நாராயணசாமி அறிவித்துள்ளார். மேலும் பள்ளிகள் திறக்கும் நாளன்றே மாணவர்களுக்கு தேவையான பாட புத்தகங்கள் மற்றும் சீருடைகள் வழங்கப்படும் எனவும் முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
புதுவையை போலவே தான் தமிழகத்தில் கோடை வெப்பமும் அனல் காற்றும் மக்களை பாடாய் படுத்தி வருகிறது. ஆனால் தமிழக கல்வித்துறையோ இதனை பற்றி சிறிதும் கவலைப்படுவது போல தெரியவில்லை. தமிழகத்திலுள்ளபெரும்பாலான பள்ளிகளுக்கு கடந்த ஏப்ரல் இரண்டாவது வாரம் முதலே விடுமுறை அறிவிக்கப்பட்டுவிட்டது.
பள்ளிகள் மீண்டும் ஜூன் 3ம் தேதி திறக்கப்படும் என அறிவித்தது. ஆனால் தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் வெயில் மட்டுமல்லாமல் அனல் காற்றும் சேர்ந்து வாட்டி வதைக்கிறது.
இதனையடுத்து பெற்றோர்கள் உட்பட பல்வேறு தரப்பினரும், ஆசிரியர் சங்கங்களும் தமிழகத்தில் பள்ளி திறப்பை தள்ளி வைக்குமாறு கோரிக்கை மேல் கோரிக்கை வைத்து பார்த்து விட்டன. ஆனால் எதற்கும் மசியாத தமிழக கல்வித்துறை, ஜூன் 3ல் திட்டமிட்டப்படி பள்ளிகளை திறந்தே தீருவோம் என கங்கணம் கட்டி கொண்டு நிற்கிறது.
ஜூன் 3-ம் தேதி பள்ளிகளை திறப்பது பள்ளி நிர்வாகங்களுக்கும் பெரும் சவாலாக தான் உள்ளது. ஏனெனில் தமிழகத்தில் வரலாறு காணாத தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் பள்ளிகளை திறந்தால் மாணவர்களின் அடிப்படை தேவைகளுக்கும், அவர்கள் குடிப்பதற்கும் எப்படி உரிய தண்ணீரை ஏற்பாடு செய்வது என விழிபிதுங்கி நிற்கின்றன.
புதுவையை பின்பற்றி தமிழகத்திலும் பள்ளிகள் திறப்பை தள்ளி வைக்க வேண்டும் என்று பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் தரப்பில் வலுவான கோரிக்கை எழுந்துள்ளது. இக்கோரிக்கையின் நோக்கம் என்னவென்று கல்வித்துறைக்கு புரியாமலில்லை. ஆனால் எதற்கும் அசைந்து கொடுக்க மாட்டேன் என்பது போல பிடிவாத போக்கை கைவிட்டு, மாணவர்களின் நலன்களையும் கருத்தில் கொள்ள வேண்டும் என்பதே நமது கோரிக்கை.