கலர் பொடிகளே சற்று ஓய்வெடுங்கள்.. ஹோலியை புதுஸ்ஸா கொண்டாடிய கிரண் பேடி!
புதுச்சேரி: தண்ணீரை சேமிப்பதற்காக பூக்களால் ஹோலி பண்டிகை கொண்டாடிய புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி.
புதுச்சேரியில் மத்திய அரசு கல்வி நிறுவனங்களான ஜிப்மர் மருத்துவக்கல்லூரி, புதுவை பல்கலைக்கழகம் மற்றும் வடமாநில மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் ஒவ்வொரு ஆண்டும் ஹோலி பண்டிகை சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம்.
ஹோலி பண்டிகை அன்று விடிய விடிய ஆட்டம் பாட்டம் என கொண்டாடி மகிழ்வார்கள். ஆனால் இந்தாண்டு கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து பொதுமக்களை பாதுகாக்க புதுச்சேரி அரசு ஹோலி பண்டிகை கொண்டாட்டத்திற்கு தடை விதித்துள்ளது.
இதனால் இந்தாண்டு புதுச்சேரியில் ஹோலி பண்டிகை கலையிழந்து காணப்பட்டது. மேலும் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க ஆளுநர் மாளிகையில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியை கிரண்பேடி இரண்டு வாரங்களுக்கு ரத்து செய்துள்ளார்.
இந்நிலையில் புதுச்சேரி ராஜ்நிவாசில் எளிமையான முறையில் ஹோலி பண்டிகையை கொண்டாடியுள்ளார் கிரண்பேடி. தண்ணீரை சேமிப்பதன் அவசியத்தை வலியுறுத்தும் வகையில், பூக்களை கொண்டு ஆளுநர் மாளிகை ஊழியர்களுடன் உற்ச்சாகத்துடன் ஹோலியை கொண்டாடியுள்ளார் கிரண்பேடி.
இதுதொடர்பான வீடியோ காட்சிகளை சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ள கிரண்பேடி, தண்ணீர் சிக்கனத்தை அனைவரும் கடைபிடிக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.