7 தமிழரை விடுதலை செய்.. பேரறிவாளன் சகோதரி முழக்கம். புதுவையை உலுக்கிய மனித சங்கிலி
புதுச்சேரி: மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளன், முருகன், நளினி உள்ளிட்ட ஏழு பேரை உடனடியாக விடுதலை செய்யக்கோரி புதுச்சேரியில் மனித சங்கிலிப் போராட்டம் நடைபெற்றது.
பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் சமூக அமைப்புகளைச் சேர்ந்த 300 க்கும் மேற்பட்டோர் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த மனித சங்கிலி போராட்டத்தில் பேறரிவாளனின் சகோதரி அருள்செல்வி கலந்துகொண்டு தனது அண்ணனை விடுவிக்கக்கோரி ஆளுநரை வலியுறுத்தி கோஷமிட்டார்.
மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 28 ஆண்டுகளாக சிறையில் உள்ள பேரறிவாளன், முருகன், நளினி உள்ளிட்ட ஏழுபேரின் விடுதலை தொடர்பாக உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பையும், தமிழக அரசின் பரிந்துரைக்கு மதிப்பளித்தும் ஏழு பேரையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.
இது தொடர்பான தமிழக அரசின் தீர்மானத்திற்கு தமிழக ஆளுநர் உடனடியாக ஒப்புதல் வழங்கக்கோரி புதுச்சேரி அண்ணா சாலையில் இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், பாமக, விடுதலை சிறுத்தைகள், நாம் தமிழர், திராவிடர் விடுதலைக் கழகம், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் சமூக அமைப்புகளை சேர்ந்த 300 க்கும் மேற்பட்டோர் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தின்போது ஏழு பேரையும் உடனடியாக விடுவிக்க வலியுறுத்தியும், ஏழு பேரின் விடுதலையில் தமிழக ஆளுநர் காலதாமதம் செய்வதாகக் கூறி அவருக்கு எதிராக கண்டன கோஷங்களையும் எழுப்பினர்.
மேலும் இந்த மனித சங்கிலி போராட்டத்தில் பேறரிவாளனின் இளைய சகோதரி அருள்செல்வி கலந்துகொண்டு தனது அண்ணனை விடுவிக்கக்கோரி ஆளுநரை வலியுறுத்தி கோஷமிட்டார். இந்த மனித சங்கிலி போராட்டம் காரணமாக அண்ணா சாலையில் சுமார் 30 நிமிடங்களுக்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.