மனைவி தலையில் சிலிண்டரை போட்டு கொன்ற கணவன்.. தூக்கிட்டு தற்கொலை.. புதுச்சேரியில் பரபரப்பு
புதுச்சேரி: புதுச்சேரியில் கேஸ் சிலிண்டரால் தாக்கி மனைவியை கொலை செய்த மீனவர், தானும் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி சோலைநகர் சுனாமி குடியிருப்பை சேர்ந்தவர் மீனவர் சுப்பிரமணி (41). இவரது மனைவி மேனகா (35). இவர்களுக்கு 10 வயதில் மகளும், 8 வயதில் மகனும் உள்ளனர். கணவன் - மனைவிக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு இருந்து வந்துள்ளது. மேலும் சுப்பிரமணி மனநிலை பாதிக்கப்பட்டு இருந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் கணவன் - மனைவிக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த சுப்பிரமணி வீட்டில் இருந்த கியாஸ் சிலிண்டரை தூக்கி மேனகாவின் தலையில் போட்டார். இதில் மேனகா பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.
மனைவி இறந்ததை கண்டு அதிர்ச்சியடைந்த சுப்பிரமணி உடனடியாக வீட்டிற்குள்ளேயே மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். சம்பவத்தின் போது இவர்களது மகளும், மகனும் தெருவில் விளையாடிக் கொண்டிருந்தனர்.
சிறிதுநேரத்தில் அவர்கள் வீட்டுக்குள் வந்த போது தங்களது பெற்றோர் பிணமாக கிடந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனே அவர்கள் வெளியே வந்து இதுபற்றி கதறி அழுதபடி அக்கம் பக்கத்தினரிடம் தெரிவித்தனர். இதுகுறித்து தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து முத்தியால்பேட்டை காவல்நிலைய போலீசார் அங்கு விரைந்து வந்தனர்.
வீட்டுக்குள் பிணமாக கிடந்த சுப்பிரமணி, மேனகா ஆகியோரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஒரே நேரத்தில் தாயையும், தந்தையையும் இழந்த குழந்தைகள் அவர்களது உடல்களைப் பார்த்து கதறி அழுதது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
தைல மரக்காட்டில் பிணம்.. 13 வயது மகளை நரபலி கொடுத்த தந்தை.. நடந்தது என்ன.. கந்தர்வகோட்டை பயங்கரம்