பிக்பாஸ் நிகழ்ச்சியை தடை செய்ய எனக்கு அதிகாரம் இல்லை.. நாராயணசாமி கைவிரிப்பு
புதுச்சேரி: பிக் பாஸ் நிகழ்ச்சியை தடை செய்யும் அதிகாரம் என்னிடம் இல்லை என்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி கூறியுள்ளார்.
புதுச்சேரி சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 26 ஆம் தேதி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி உரையுடன் தொடங்கியது. கடந்த 28 ஆம் தேதி நிதித்துறை பொறுப்பு வகிக்கும் முதலமைச்சர் நாராயணசாமி 2019 - 2020 ஆம் நிதி ஆண்டிற்காக 8 ஆயிரத்து 425 கோடி ரூபாய்க்கான பட்ஜெட்டை பேரவையில் தாக்கல் செய்தார்.
இதனைதொடர்ந்து பட்ஜெட் மீதான விவாதமும், மானிய கோரிக்கைகள் மீதான விவாதமும் நடைபெற்றன. மானியகோரிக்கைகள் மீது துறை வாரியாக அமைச்சர்கள் பதில் அளித்தனர்.
மானியக்கோரிக்கை மீது நடைபெற்ற விவாதத்தின்போது பேசிய என்.ஆர்.காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ஜெயபால், தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பபடும் பிக்பாஸ் நிகழ்ச்சியால் சமுதாய சீர்கேடு ஏற்படுவதாகவும், அதை உடனடியாக தடை செய்ய வலியுறுத்தி, புதுச்சேரி அரசு சார்பில் மத்திய அரசுக்கு கடிதம் எழுத வேண்டுமென தெரிவித்தார்.
இதற்கு பதிலளித்த முதலமைச்சர் நாராயணசாமி, சிரித்தவாறே அந்த நிகழ்ச்சியை தடை செய்யும் அதிகாரம் எனக்கு இல்லை என தெரிவித்தார். அப்போது குறுக்கிட்ட சபாநாயகர் சிவகொழுந்து, சட்டமன்ற உறுப்பினர் ஜெயபால் ரிமோட் மூலம் வேறு தொலைக்காட்சியை மாற்றி பார்க்க வேண்டியதுதானே என்று கூற அவையில் சிரிப்பலை ஏற்பட்டது.
அமலா பால் கார்:
இதேபோல, புதுச்சேரி மாநிலத்தில் வசிப்பது போன்று போலியான முகவரி கொடுத்து நடிகை அமலாபால் கார் வாங்கிய விவகாரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன என அதிமுக சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்தார் போக்குவரத்து துறை அமைச்சர் ஷாஜகான்.
அவர் கூறுகையில், புதுச்சேரி போக்குவரத்து விதிமுறைகளுக்குட்பட்டுத்தான் அமலாபால் கார் வாங்கியுள்ளார் என்றும், வெளிமாநிலத்தவர் புதுச்சேரியில் கார் வாங்கும்போது தற்காலிக பதிவு தான் செய்யப்படுகின்றது. அதற்கு ஒரு வருடம் அவகாசாம் உள்ளது. அதை எந்த மாநிலத்திற்கு கொண்டு செல்கின்றார்களோ அங்கு அந்த மாநில விதிப்படி வரி செலுத்த வேண்டும் என விளக்கமளித்தார்.
இதனை தொடர்ந்து முதலமைச்சர் தாக்கல் செய்த பட்ஜெட் பேரவையில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. பின்னர் சட்டப்பேரவையை காலவரையின்றி ஒத்திவைத்தார் துணை சபாநாயகர் பாலன். புதுச்சேரி சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் 10 நாட்கள் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.