சுடுகாட்டில் வெடித்த வெடிகுண்டு.. கூலித்தொழிலாளி படுகாயம்.. நடந்தது என்ன?
புதுச்சேரி: புதுச்சேரி கோர்க்காடு பகுதியில் சுடுகாட்டில் நாட்டு வெடிகுண்டு வெடித்து கூலித்தொழிலாளி ஒருவர் படுகாயமடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி குருவிநத்தம் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன் (52). கட்டிடம் கட்டும் தொழிலாளியான இவர், கோர்காடு பகுதியில் புதிதாக முதியோர் இல்லம் கட்டுமான பணியில் ஈடுபட்டார். அப்போது சில பொருட்கள் அருகில் இருந்த சுடுகாட்டின் பக்கம் கீழே விழுந்துள்ளது.
இதனை எடுப்பதற்காக வெங்கடேசன் சுடுகாட்டு பகுதிக்கு சென்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக அங்கு ஒரு பையில் இருந்த நாட்டு வெடிகுண்டு பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியதில் அப்பகுதி புகைமூட்டமாக காட்சியளித்தது.
பிறகு சத்தம் கேட்டு அங்கு வேலை செய்தவர்கள் சுடுகாட்டு பகுதிக்கு ஓடிவந்து பார்த்தபோது வெங்கடேசன் காலில் பலத்த காயமடைந்து மயங்கி கிடந்தார். உடனடியாக அவரை மீட்டு புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்தனர்.
தகவலறிந்து சம்பவம் இடத்திற்கு வந்த மங்கலம் காவல்நிலைய போலீசார் மற்றும் தடயவியல் நிபுணர்களும் குண்டு வெடித்த இடத்தில் கிடந்த துகள்களை சேகரித்து, ஆய்வுக்காக எடுத்துச் சென்றனர். போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், சுடுகாடு பகுதியில் பையில் நாட்டு வெடிகுண்டை மர்ம நபர்கள் பதுக்கி வைத்திருந்ததும், கூலித்தொழிலாளி சவுக்கு கட்டையை நகர்த்தியபோது உராய்வு ஏற்பட்டு அது வெடித்ததும் தெரியவந்தது.
வெடிகுண்டு பதுக்கி வைத்திருந்த பையில் ஒரு கத்தி மற்றும் குண்டு தயாரிப்பதற்கான மூலப்பொருட்களும் இருந்தன. இதனிடையே
கொலை செய்யும் திட்டத்துடன் அப்பகுதியை சேர்ந்த ரவுடி கும்பல் வெடிகுண்டை தயாரித்து சுடுகாடு பகுதியில் பதுக்கி வைத்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சுடுகாட்டில் நாட்டு வெடிகுண்டு வெடித்து தொழிலாளி படுகாயமடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.