வீட்ல இருந்தா மட்டும் போதும்.. பொருட்களை நாங்க தர்றோம்.. எக்ஸ்ட்ரா காசு தேவையில்லை.. புதுவையில்!
புதுச்சேரி: புதுச்சேரியில் கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வீடுகளுக்கே வந்து மளிகை பொருட்களை வழங்கும் திட்டத்தை வணிகர் கூட்டமைப்புடன் இணைந்து புதுச்சேரி அரசு தொடங்கியுள்ளது. இதற்கு பிரத்யேகமாக கட்டணம் ஏதும் வசூலிக்கப்படவில்லை.
Recommended Video
புதுச்சேரியில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க கடந்த திங்கட்கிழமை முதல் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க மாநில அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
பொதுமக்கள் வெளியே சுற்ற வேண்டாம் என்றும், கூட்டம் கூட வேண்டாமெனவும் அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இந்நிலையில் மளிகை பொருட்கள், காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை வாங்க பொதுமக்கள் அதிக அளவில் வெளியே வருகின்றனர்.
வைரஸ் பரவலைத் தடுக்க
இதனால் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்கவும், மக்கள் வீட்டைவிட்டு வெளியே வராமல் இருக்க புதுச்சேரி வணிகர் கூட்டமைப்பினர் புதிய முயற்சி ஒன்றை மேற்கொண்டுள்ளனர். அதன்படி புதுச்சேரி அரசுடன் இணைந்து பொதுமக்களுக்கு தேவையான மளிகை பொருட்களை அவர்களின் வீடுகளுக்கே சென்று கொடுக்கும் புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளனர்.
புதுவை முழுவதும்
அதன்படி புதுச்சேரி முழுவதும் 23 நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களுக்கு வேண்டிய மளிகை பொருட்கள் பட்டியலை ஆன்லைன் மூலமாகவோ அல்லது தொலைபேசி மூலமாகவே தொடர்புகொண்டு தெரிவித்தால், அடுத்த 6 மணி நேரத்திற்குள் அவர்களது வீட்டுக்கு மளிகை பொருட்கள் கொண்டு சேர்க்கப்படுகிறது. இதற்கு சேவை கட்டணம் எதுவும் வசூலிக்கப்படவில்லை.
புதுச்சேரி வணிகர்கள்
இதுகுறித்து புதுச்சேரி மாநில வணிகர் கூட்டமைப்பு தலைவர் சிவசங்கரன் கூறுகையில், கொரோனா வைரஸால் புதுச்சேரி மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் கிடைப்பதில் தடை ஏற்படக்கூடாது என்பதற்காக இந்த திட்டத்தை தொடங்கியுள்ளோம். பொதுமக்கள் PTF Grocery Supply Pondicherry என்ற கூகுள் பார்மிலோ அல்லது 9443239933, 9944071712 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்புகொண்டு தங்களுக்கு தேவையான பொருட்களை ஆர்டர் செய்யலாம். மேலும் குறைந்தபட்சம் 300 ரூபாய்க்கு ஆர்டர் செய்ய வேண்டும். இதற்காக டெலிவரி கட்டணம் ஏதும் வசூலிக்கப்படாது.
குறைந்தபட்ச ஆர்டர் 300 ரூபாய்
ஆர்டர் செய்த 6 மணி நேரத்திற்குள் பொருட்கள் டெலிவரி செய்யப்படும். இந்த முயற்சி தொடங்கிய சிறிது நேரத்திலேயே 750 ஆர்டர்கள் வந்துள்ளது. அதில் 350 ஆர்டர்கள் மக்களிடம் வீட்டிற்கே கொண்டு சேர்த்துள்ளோம். தொடர்ந்து ஆர்டர்கள் வந்துகொண்டு இருக்கிறது என்றார். மேலும் மக்கள் வெளியே வருவதை தடுக்கவும், கொரோனா வைரஸ் புதுச்சேரியில் பரவாமல் தடுக்கும் நோக்கில் இந்த முயற்சி தொடங்கியுள்ளதாகவும், இதை ஒரு சேவையாக செய்வதாக வணிகர் கூட்டமைப்பினர் தெரிவித்தார்.