ஜிப்மரிலும் எம்.பி.பி.எஸ் அட்மிஷனுக்கு வந்தது நீட்.. வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு
புதுச்சேரி: வரும் 2020 ஆம் கல்வியாண்டு முதல் புதுச்சேரியில் உள்ள மத்திய அரசின் கல்வி நிறுவனமான ஜிப்மர் மருத்துவக் கல்லூரியிலும் நீட் தேர்வு மூலம் எம்.பி.பி.எஸ் படிப்பிற்கான மாணவர் சேர்க்கை நடத்தப்படும் என ஜிப்மர் நிர்வாகம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
எம்.பி.பி.எஸ் மற்றும் முதுகலை மருத்துவப் படிப்புகளில் சேர தேசிய அளவிலான நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே இந்தியா முழுவதுமுள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவகல்லூரிகளில் சேர முடியும். ஆனால் மத்திய அரசுக்கு சொந்தமான எய்ம்ஸ் மருத்துவ கல்லூரிகள் மற்றும் புதுச்சேரியில் உள்ள ஜிப்மர் மருத்துவ கல்லூரிக்கு மட்டும் ஆண்டுதோறும் தனியாக நுழைவு தேர்வு நடத்தப்பட்டு, மாணவர் சேர்க்கை நடைபெற்று வந்தது.
எய்ம்ஸ் மற்றும் ஜிப்மர் கல்லூரிகளுக்கு மட்டும் தனியாக நுழைவு தேர்வு நடத்துவது அதிக செலவையும், பல்வேறு நடைமுறை சிக்கல்களும் ஏற்படுகிறது. அதேபோல் தேர்வில் பல்வேறு குளறுபடிகள் ஏற்படுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதனால் ஜிப்மர் மற்றும் எய்ம்ஸ் கல்லூரிகளிலும் நீட் தேர்வு மூலமே மாணவர் சேர்க்கையை நடத்துவதற்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் முடிவு செய்தது. அதனடிப்படையில், ஜிப்மர் மருத்துவக்கல்லூரியில் வரும் கல்வியாண்டு முதல் நீட் தேர்வு மூலம் மாணவர் சேர்க்கை நடத்தப்பட உள்ளது.
இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை ஜிப்மர் நிர்வாகம் வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில், மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் உத்தரவுபடி வரும் 2020 ம் கல்வியாண்டு முதல் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவ கல்லூரி மற்றும் காரைக்காலில் உள்ள ஜிப்மர் மருத்துவ கல்லூரி கிளை ஆகிய இரண்டு கல்லூரிகளிலும் நீட் தேர்வு மூலம் எம்.பி.பி.எஸ் படிப்பிற்கான மாணவர் சேர்க்கை நடத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி கோரிமேடு பகுதியில் அமைந்துள்ள ஜிப்மர் மருத்துவக்கல்லூரியில் 150 மற்றும் காரைக்கால் ஜிப்மர் கிளையில் 50 என மொத்தம் 200 எம்.பி.பி.எஸ் இடங்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.