ஊரடங்கிலும் படுஜோராக "சியர்ஸ்".. கிரண்பேடி டென்ஷன்.. 22 பார்களின் உரிமம் ரத்து!
புதுச்சேரி: புதுச்சேரியில் ஊரடங்கு உத்தரவை மீறி கள்ளத்தனமாக மதுபானம் விற்பனை செய்த 22 மதுக்கடைகளின் உரிமம், துணைநிலை ஆளுநர் கிரண்பேடியின் உத்தரவின்பேரில் ரத்து செய்யப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளில் மத்திய, மாநில அரசுகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க நாடு முழுவதும் வரும் மே 3 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனிடையே பொதுமக்கள் ஒரே இடத்தில் கூட்டமாக கூடாது என்பதற்காக சினிமா தியேட்டர்கள், வணிக வளாகங்கள், மார்க்கெட்டுகள் அனைத்தும் மூடப்பட்ட்டுள்ளன.
மேலும் மதுபானக்கடைகள், கள், சாராயக்கடைகளும் திறக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இருந்தபோதிலும் மதுவுக்கு பேர்போன புதுச்சேரி மாநிலத்தில் மூடப்பட்டிருக்கும் மதுபானக் கடைகளில் இருந்து சட்டவிரோதமாக மதுபானங்கள் எடுத்து வரப்பட்டு அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இதனை தடுக்க கலால் துறை துணை ஆணையர் தயாளன் மேற்பார்வையில் 3 பறக்கும்படைகள் அமைக்கப்பட்டது. இதில் இடம் பெற்றுள்ள குழுவினர் அனைத்து பகுதிகளிலும் ஆய்வு மேற்கொண்டு கள்ளத்தனமாக விற்பனை செய்யப்படும் மதுபானங்களை அதிரடியாக பறிமுதல் செய்து வருகின்றனர். மேலும் புதுச்சேரியில் உள்ள மொத்த மதுபான விற்பனை குடோன்கள், பார்கள், சில்லரை மதுபான கடைகளை கலால் துறையினர் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வந்த நிலையில், கள்ளத்தனமாக மதுபானம் விற்கப்படுவது குறைந்தபாடில்லை.
இந்நிலையில் இது தொடர்பான புகார் துணைநிலை ஆளுநர் கிரண்பேடிக்கு சென்றது. இதனையடுத்து சட்ட விரோதமாக மதுக் கடைகளைத் திறந்து மதுபானங்களை விற்பனை செய்யும் கடைகளின் மீது நடவடிக்கை எடுக்க ஆளுநா் கிரண்பேடி, அதிகாரிகளுக்கு அதிரடியாக உத்தரவிட்டாா்.
அதன்படி, புதுச்சேரியில் சட்டவிரோதமாக மதுபானங்களை விற்பனை செய்த 14 மதுக்கடைகள், 7 சாராயக் கடைகள், ஒரு கள்ளுக்கடை என மொத்தம் 22 கடைகளுக்கு சீல் வைத்த அதிகாரிகள், கடைகளின் உரிமத்தையும் ரத்து செய்துள்ளனா்.
மேலும் அதிகாரிகள் மதுக்கடைகளுக்கு சீல் வைக்க சென்றபோது, மதுபான கடைதான் திறக்கப்போவதாக கருதி, மது பாட்டில் கிடைக்குமா? என்று மது பிரியர்கள் கடைகளை சுற்றி சுற்றி வந்தனர். அவர்களை போலீசார் அங்கிருந்து துரத்தினர்.