நித்யானந்தாவின் நெருங்கிய சீடர் கழுத்தறுத்து கொலை.. காரில் சடலம் மீட்பு.. பரபரப்பு
புதுச்சேரி: புதுச்சேரியில் இரண்டு லட்சம் பணத்துடன் சென்ற சாமியார் நித்யானந்தவின் நெருங்கிய சீடர் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி ஏம்பலம் பகுதியை சேர்ந்தவர் வஜ்ரவேல் (51). இவர் ஏம்பலம் மற்றும் வில்லியனூர் பகுதிகளில் நித்யானந்தா பெயரில் பேக்கரி நடத்தி வருகிறார். மேலும் கிருமாம்பாக்கம் பகுதியில் புதிதாக பேக்கரி அமைப்பதற்கான பணிகளையும் கவனித்து வந்துள்ளார்.
இதனிடையே நேற்று இரவு செம்பியப்பாளையம் பகுதியில் உள்ள தனது உறவினரிடம் இருந்து ரூபாய் 2 லட்சம் பணம் பெற்றுக்கொண்டு, வீட்டிற்கு தனது காரில் சென்றுள்ளார். ஆனால் வெகுநேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதனையடுத்து அவருடைய மனைவி வள்ளியம்மாள் தனது கணவரின் தொலைபேசிக்கு தொடர்பு கொண்டுள்ளார். ஆனால் அவரது போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது.
நேற்று இரவு முழுவதும் புதுச்சேரி மற்றும் சுற்றுவட்டார கிராமப்பகுதிகளில் தேடியும் வஜ்ரவேல் கிடைக்கவில்லை. இதனை தொடர்ந்து அவரது மனைவி வள்ளியம்மாள் மங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின்பேரில், மங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, வஜ்ரவேலுவை தீவிரமாக தேடி வந்த நிலையில், இன்று பாகூர் பகுதியில் வஜ்ரவேலு காரில் கழுத்து அறுக்கப்பட்டு பிணமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பாகூர் போலீசார் வஜ்ரவேலுவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதனிடையே வஜ்ரவேலு பணம் கொண்டு சென்றதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் அவரை கடத்தி பணத்திற்காக கொலை செய்தார்களா அல்லது முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டாரா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொலை செய்யப்பட்டுள்ள வஜ்ரவேலு சாமியார் நித்யானந்தாவின் நேரடி தொடர்பில் இருந்த நெருங்கிய சீடர் ஆவார். நித்யானந்தவை புதுச்சேரிக்கு அழைத்து வந்து ஏம்பலம் பகுதியில் புதுச்சேரி மாநிலத்தில் நித்யானந்தவின் தலைமை ஆசிரமத்தை நிரவியவரும் இவரே. நித்யானந்தா செல்லும் இடங்களுக்கெல்லாம் இவர் தனது குடும்பத்தினருடன் சென்று வருவார் என்பது குறிப்பிடத்தக்கது. புதுச்சேரியில் நித்யானந்தவின் நெருங்கிய சீடர் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.