கொரோனாவிலிருந்து புதுவை மக்களை காக்கும் திருநங்கைகள்.. விழிப்புணர்வு ஏற்படுத்தும் நெகிழ்ச்சி
புதுச்சேரி: கொரோனா வைரஸிலிருந்து புதுச்சேரி மக்களை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டு வரும் திருநங்கைகளின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக மக்களிடையே கடும் பீதி ஏற்பட்டுள்ளது.
புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க மத்திய அரசும், புதுச்சேரி மாநில அரசும் இணைந்து பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி உள்ளது. மத்திய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் கூடுதல் செயலாளர் திருப்புகழ் தலைமையிலான குழு இந்த பணிகளை புதுச்சேரியில் கண்காணித்து வருகிறது.
புதுச்சேரி விமான நிலையம், ரயில் நிலையம், பேருந்து நிலையம் மற்றும் மாநில எல்லைப்பகுதிகளில் நிலையான மருத்துவ குழுக்கள் அமைக்கப்பட்டு வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளிலிருந்து வரும் சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் தீவிர சோதனைக்கு பிறகே புதுச்சேரிக்குள் அனுமதிக்கப்படுகின்றனர். புதுச்சேரி அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டாலும், சுகாதாரத்துறையில் ஆட்கள் பற்றாக்குறை காரணமாக கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது.
இத்தகைய சூழ்நிலையில், புதுச்சேரியில் உள்ள திருநங்கைகள் ஒன்றிணைந்து கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். புதுச்சேரியை சேர்ந்த 20 க்கும் மேற்பட்ட திருநங்கைகள், தன்னார்வ அமைப்புகளுடன் ஒன்று சேர்ந்து புதுச்சேரி புதிய பேருந்து நிலையம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கிருமிநாசினி தெளித்தல், பிளீச்சிங் பவுடர் போடுதல் உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் பேருந்து நிலையம் மற்றும் பொதுமக்கள் அதிகம் வரும் பகுதிகளுக்கு செல்லும் திருநங்கைகள், கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து எப்படி தங்களை பாதுகாத்து கொள்வது குறித்த விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகின்றனர். திருநங்கைகளின் இந்த செயலுக்கு பலரும் தற்போது பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
திருநங்கைகள் என்றாலே சமுதாயத்தில் ஒரு தவறான பார்வை இருந்து வருகிறது. ஆனால் இவற்றை பொய்ப்பிக்கும் வகையில், சமூகத்தில் நாங்களும் ஒரு அங்கம். மனித சமூகத்திற்கு ஆபத்து என்றால் முதல் நபராக நாங்கள் இருப்போம் என்பதற்கேற்ப, புதுச்சேரி முழுவதும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் திருநங்கைகளின் செயல்பாடு உள்ளது. இவர்களை போல் நாமும் அரசாங்கத்தை எதிர்பார்க்காமல், கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க நம்மால் முடிந்த சிறு சிறு பணிகளை செய்து, கொரோனாவில் மனித சமூகத்தை பாதுகாக்கலாம்.