கொரோனா எதிரொலி.. புதுச்சேரி ஏனாமில் 144 தடை.. பொதுமக்களுக்கு கடும் கட்டுப்பாடு!
புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க புதுச்சேரி பிராந்தியமான ஏனாமில் இன்று முதல் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை மாநில அரசு தீவிரப்படுத்தியுள்ளது. புதுச்சேரியில் இதுவரை ஒருவருக்கு மட்டுமே கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதுவும் கேரள மாநிலம் அருகேயுள்ள புதுச்சேரி மாநில பிராந்தியமான மாஹே பள்ளூர் பகுதியை சேர்ந்த 68 வயது மூதாட்டி ஒருவர் அபுதாபியில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று விட்டு, கடந்த வாரம் கோழிகோடு விமானம் நிலையம் மூலம் மாஹே வந்தார்.
அப்போது அவருக்கு கடுமையான காய்ச்சல், சளி, தலைவலி ஏற்பட்டது. இதனால் மாஹே அரசு மருத்துவமனையில் சேர்க்கபட்டார். பின்பு அவரது ரத்தமாதிரிகள், கோழிகோடு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அங்கு பரிசோதனையில் அந்த மூதாட்டிக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி ஆனது. இதன் பேரில் அந்த மூதாட்டி, மருத்துவமனையில் தனிமைபடுத்தபட்டு தற்போது தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறார். தற்போது மாஹேவுக்கு 1 கோடி ரூபாய் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
இச்சூழலில் புதுச்சேரியின் மற்றொரு பிராந்தியமான ஆந்திர மாநிலம் கோதாவரி அருகே உள்ள ஏனாமில் 144 தடை உத்தரவு கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக இன்று முதல் பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொதுஇடங்களில் மக்கள் ஒன்று கூடக்கூடாது. 4 பேருக்கு மேல் கூடி நிற்கக்கூடாது என்று கட்டுப்பாடுகள் கொரோனா அச்சுறுத்தலால் அமலாகியுள்ளதாக ஏனாம் சப் டிவிஷனல் மாஜிஸ்திரேட் சிவராஜ் மீனா குறிப்பிட்டுள்ளார்.
எனினும் புதுச்சேரி, காரைக்கால் மாவட்டங்கள் மற்றும் மாஹே பிராந்தியத்திற்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படவில்லை. இதனிடையே சுகாதாரத்துறை சார்பில் செய்யப்பட்டுள்ள கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் நாராயணசாமி நேற்று நள்ளிரவு நேரடியாக சென்று ஆய்வில் ஈடுபட்டார்.
கொரோனா.. மொத்தம் 4 ஸ்டேஜ்.. 3வது ஸ்டேஜிலிருந்துதான் கோரத் தாண்டவம் ஆரம்பம்.. முழு விவரம்
முதலாவதாக நகரின் மையப்பகுதியில் உள்ள மளிகை கடை ஒன்றிற்கு சென்ற முதலமைச்சர், அங்கு பொருட்கள் வாங்க வந்த பொதுமக்களிடத்தில் கொரோனா குறித்து பயப்பட வேண்டாம் என்றும், கடைகள் எதுவும் மூடப்படாது என கூறினார். இதனையடுத்து பேருந்து நிலையம், கோரிமேடு மற்றும் கனகசெட்டிகுளம் உள்ளிட்ட புதுச்சேரி மாநில எல்லைப் பகுதிக்கு சென்ற அவர், வெளிமாநிலங்களில் இருந்து புதுச்சேரிக்கு வருபவர்களிடம் மேற்கொள்ளப்படும் மருத்துவ பரிசோதனைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்வுக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் நாராயணசாமி, பிரதமர் நரேந்திரமோடி கூறியபடி புதுச்சேரியில் மக்கள் அமைதியாக இருக்கிறார்கள். பாதுகாப்பாக இருக்கிறார்கள். பிரதமர் நரேந்திரமோடியின் வேண்டுகொளுக்கிணங்க வருகின்ற 22 ஆம் தேதி புதுச்சேரி மக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வராமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். மேலும் புதுச்சேரியில் கொரோனா முன்னெச்சரிக்கைக்காக 17.5 கோடி ரூபாய் நிதக ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், மகளிர் சுய உதவி குழுக்கள் மூலம் முக கவசம் தயாரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.