பரபரப்பான அரசியல் சூழலில் நாளை மறுநாள் கூடும் புதுவை சட்டமன்றம்.. சபாநாயகர் பதவிக்கு கடும் போட்டி
புதுச்சேரி: பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் புதுச்சேரி சட்டப்பேரவை கூட்டம் வருகின்ற 3-ம் தேதி திங்கட்கிழமை கூட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினமே புதுவை சட்டமன்றத்திற்கு புதிய சபாநாயகரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி மாநில சட்டமன்றத்தின் சபாநாயகராக இருந்தவர் வைத்திலிங்கம். நடைபெற்று முடிந்த மக்களவை தேர்தலில் இவரை புதவை தொகுதிக்கு களமிறக்க, காங்கிரஸ் கட்சி முடிவு செய்தது. இதுதொடர்பாக மேலிட அழைப்பினை ஏற்று நாராயணசாமி, காங்கிரஸ் தலைவர் நமச்சிவாயம், சபாநாயகராக இருந்த வைத்திலிங்கம், முன்னாள் தலைவர் ஏ.வி.சுப்ரமணியன் ஆகியோர் டெல்லி சென்றனர்.
நேரில் கலந்தாலோசித்த பின்னர் புதுவை மக்களவை தொகுதி வேட்பாளராக வைத்திலிங்கத்தை தேர்வு செய்தது கட்சி தலைமை. இதனை ஏற்ற அவர் தனது புதுச்சேரி சட்டமன்ற சபாநாயகர் பதவியை அதிரடியாக ராஜினாமா செய்தார். பின்னர் காங்கிரஸ் கட்சி சார்பில் புதுச்சேரி மக்களவை தொகுதியில் போட்டியிட்டார்.
இந்த தேர்தலில் என்.ஆர். காங்கிரஸ் சார்பில் டாக்டர் நாராயணசாமி அ.ம.மு.க. சார்பில் தமிழ்மாறன், மக்கள் நீதி மய்யம் சார்பில் டாக்டர் எம்.ஏ.சுப்பிரமணியன் ஆகியோர் போட்டியிட்டனர். மே 23ம் தேதி நடைபெற்ற வாக்கு எண்ணிக்கயைின் முடிவில், காங்கிரஸ் வேட்பாளராக களமிறங்கிய வைத்திலிங்கம் 1 லட்சத்து 97 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று மக்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார்.
இந்நிலையில் புதுவை சட்டமன்றத்தில் சபாநாயகர் பதவி காலியாக உள்ளது. இதனையடுத்து புதுவை பேரவைக்கு புதிய சபாநாயகரை தேர்ந்தெடுப்பதற்காக, புதுச்சேரி சட்டப்பேரவை கூட்டம் வருகின்ற ஜூன் 3-ம் தேதி திங்கட்கிழமை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது பற்றி அறிவிப்பை வெளியிட்டுள்ள புதுவை சட்டப்பேரவை செயலாளர் வின்சென்ட் ராயர், ஜூன் 3 அன்று காலை 9.30 மணிக்கு புதுவை சட்டமன்ற கூட்டம் நடைபெறும் என அறிவித்துள்ளார்.
வைத்திலிங்கம் எம்.பி. ஆகிவிட்டதால் அன்றைய தினம் புதுச்சேரி சட்டப்பேரவைக்கு புதிய சபாநாயகர் தேர்ந்தெடுக்கப்படுவார் என்றும் அவர் தெரிவித்துள்ளார். சபாநாயகர் பதவியை பெற தற்போது துணை சபாநாயகராக உள்ள சிவகொழுந்து, முதலமைச்சரின் பாராளுமன்ற செயலாளர் லட்சுமிநாராயணன், அரசு கொறடா அனந்தராமன், காங்கிரஸ் எம்எல்ஏ பாலன் உள்ளிட்டவர்களிடையே கடும் போட்டி நிலவி வருகிறது. மேலும் இவர்களில் ஒருவர் சபாநாயகராக நியமிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
மக்களவை தேர்தலுக்கு பிறகு கூடும் முதல் சட்டப்பேரவை கூட்டம் என்பதால் மின் கட்டண உயர்வு, மக்கள் நலத்திட்டங்களை சரிவர செயல்படுத்தாது உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை எழுப்ப எதிர்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. மேலும் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி பதவியேற்று 3 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், அவர் மாற்றப்படலாம் என கடந்த சில நாட்களாக புதுச்சேரியில் தகவல் பரவி வருகிறது. இதுகுறித்தும் பேரவையில் விவாதிக்கப்படலாம் என தெரிகிறது.