புதுவை கடற்கரை சாலையில் சர்வதேச யோகா தின விழா பிரமாண்ட கொண்டாட்டம்.. 4,000 பேர் பங்கேற்பு
Recommended Video
புதுச்சேரி: புதுச்சேரி கடற்கரை சாலையில் நடைபெற்ற சர்வதேச யோகா தின விழாவில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் பங்கேற்ற பிரமாண்ட யோகா நிகழ்ச்சி நடைபெற்றது
ஜூன் 21ம் தேதியான இன்று சர்வதேச யோகா தினம் நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. புதுச்சேரியிலும் சர்வதேச யோகா தினவிழா வெகு சிறப்பாக கொண்டாப்பட்டு வருகிறது
சர்வதேச யோகா தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21-ம் தேதி கடைபிடிக்கப்பட்டு வருகிறது. கடந்த 2015-ம் ஆண்டு முதல் ஜூன் 21-ந் தேதி சர்வதேச யோகா தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று 5-வது சர்வதேச யோகா தினம் கொண்டாடப்படுகிறது.
சர்வதேச யோகா தினத்தையொட்டி புதுச்சேரி கடற்கரை சாலையில் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு யோகா தின கொண்டாட்டம் பிரமாண்டமாக நடைபெற்றது இந்த சர்வதேச யோகா தின கொண்டாட்டத்தில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்
இவர்களை தவிர தொண்டு நிறுவனங்களை சேர்ந்தவர்கள், அரசு ஊழியர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் கலந்துகொண்டு மூச்சு பயிற்சி, ஆசனா பயிற்சி, தியானம் உள்ளிட்ட 100-க்கணக்கான ஆசனங்களை செய்து காட்டி அசத்தினர். உடல் தளர்வு,மூச்சு பயிற்சி,ஆசனா பயிற்சி,தியானம் என ஒரு மணி நேரம் இந்த யோகாசன நிகழ்ச்சி நடைபெற்றது
இதில் தலைமை செயலர் அஸ்வனி குமார், கல்வித்துறை இயக்குநர் ருத்ரகௌடு, சுகாதாரத்துறை இயக்குநர் ராமன் மற்றும் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
கடற்கரை சாலையில் நடைபெற்ற யோகா தினவிழாவையொட்டி கடற்கரை சாலை உள்ளிட்ட அதன் இணைப்பு சாலைகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டிருந்தது சர்வதேச யோகா தின கொண்டாட்டத்திற்காக ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
முன்னதாக நேற்று புதுவை கடற்கரை சாலையில் நேற்று யோகா செயல் விளக்க ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது. புதுச்சேரியில் உள்ள பல்வேறு பள்ளிகளை சேர்ந்த மாணவ-மாணவியர் திரளாக பங்கேற்றனர்.கடற்கரை சாலையில் யோகா ஒத்திகை நடந்ததால், அதிகாலையில் போக்குவரத்து தடை செய்யப்பட்டு, போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.