அப்படியே ஐபிஎல் போட்டியை நேர்ல பார்த்த மாதிரி இருந்துச்சு.. பாண்டிச்சேரி ரசிகர்கள் குஷி!
புதுச்சேரி : சென்னை சூப்பர்கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடெல்ஸ் அணிகள் மோதிய ஐபிஎல் கிரிக்கெட் போட்டியினை புதுச்சேரியில் பிசிசிஐ நிர்வாகம் பெரிய திரையில் ஒளிபரப்பியது. இதனை ஏராளமான ரசிகர்கள் பார்த்து மகிழ்ந்தனர்.
பிசிசிஐ கிரிக்கெட்டை வளர்க்கும் நோக்கில் கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் நாடு முழுவதும் கிரிக்கெட் போட்டிகளை பெரிய திரையில் ஒளிபரப்பி வருகிறது.
ஐபில் ஃபேன்ஸ் பார்க்
தற்போது ஐபிஎல் கிரிக்கெட் போட்டியினை ரசிகர்கள் பார்ப்பதற்காக 21 மாநிலங்களில், 36 நகரங்களை தேர்வு செய்து ஐபில் ஃபேன்ஸ் பார்க் என்ற பெயரில் மிகப்பெரிய மைதானத்தில் பெரிய திரையில் ஐபிஎல் போட்டியை காண்பித்து ரசிகர்களை மகிழ்வித்து வருகின்றனர்.
பெரிய திரை
இந்நிலையில் புதுச்சேரியில் முதல்முறையாக இன்று (மே 10) சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடெல்ஸ் அணிகள் மோதிய ஐபிஎல் போட்டியை கருவடிக்குப்பத்தில் உள்ள தனியார் பள்ளி மைதானத்தில் பெரிய திரையில் ஒளிபரப்பினர்.
ஆயிரக்கணக்கான ரசிகர்கள்
பெரிய திரையில் கிரிக்கெட் போட்டியினை காண்பதற்கு ஆயிரக்கணக்கான ரசிகர்கள் தங்களது குடும்பத்துடன் மைதானத்திற்கு வருகை புரிந்து ஆர்வத்துடன் ஐபிஎல் போட்டியை கண்டு களித்தனர். மேலும் இரு அணி வீரர்களும் ரன்கள் எடுக்கும் போதும், விக்கெட் எடுக்கும் போதும் ரசிகர்கள் விசில் அடித்தும், கைகளை உயர்த்தியும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
ரசிகர்கள் மகிழ்ச்சி
அதேபோல் பெரிய திரையில் கிரிக்கெட் போட்டிகளை பார்ப்பது மைதானத்திற்கே நேரடியாக சென்று போட்டிகளை பார்த்த அனுபவத்தை தருவதாக ரசிகர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.