என்னாது.. ரங்கசாமி .. ஏனாம் தொகுதியில் போட்டியிடப் போறாரா.. வீடியோ வைரல்!
புதுச்சேரி: புதுச்சேரியில் ஏகப்பட்ட தேர்தல் கலாட்டாக்கள் காத்திருக்கும் போல.. இப்போது ஒரு வீடியோ பரபரப்பாக வலம் வருகிறது. அதுதான் பரபரப்பைக் கூட்டியுள்ளது.
புதுச்சேரியில் நாராயணசாமி தலைமையில் சிவனே என்று ஒரு ஆட்சி நடந்து வந்தது. கிரண் பேடியுடன் சண்டை போடுவதும், அவர் இவர்களுடன் சண்டை போடுவதும் என ஒரு மார்க்கமாக அது போய்க் கொண்டிருந்தது.
திடீரென அந்தக் கூட்டைக் கலைத்து சில குருவிகளை மட்டும் வெளியே பத்தி விட்டு விட்டனர். கடைசியில் நாராயணசாமி முன்னாள் முதல்வராகி விட்டார்.. புதுச்சேரியில் இருந்து வந்த அரசும் புஸ்வானமாகி விட்டது.
ரங்கசாமி
அடுத்து தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு விட்டது. எல்லாக் கட்சிகளும் தேர்தலுக்குத் தயாராகி வருகின்றனர். கூட்டணிகள் களை கட்ட ஆரம்பித்துள்ளன. இப்போதைக்கு ரங்கசாமி தலைமையிலான கூட்டணி மீதுதான் அத்தனை பேரின் பார்வையும் விழுந்துள்ளது.
அடுத்த முதல்வர்?
புதுச்சேரியைப் பொறுத்தவரை ரங்கசாமி பழுத்த அரசியல்வாதி. முழுமையாக பதவிக்காலத்தை முடித்த ஒரே முதல்வரும் கூட. அவரது என். ஆர். காங்கிரஸ் கட்சி மீது அனைவரின் பார்வையும் பதிந்துள்ளது. வரும் தேர்தலில் ரங்கசாமி தலைமையிலான கூட்டணிதான் வெல்லும் என்றும் கருத்துக் கணிப்புகள் கூற ஆரம்பித்து விட்டன.
மல்லாடி வீடியோ
இந்த நிலையில் ரங்கசாமி போட்டியிடப் போகும் தொகுதி குறித்த ஒரு வீடியோ பரபரப்பாக வலம் வருகிறது. அந்த வீடியோவில் பேசியிருப்பவர் மல்லாடி கிருஷ்ணா ராவ். இவர் முன்னாள் அமைச்சர் ஆவார். முன்பே பதவி விலகிப் போய் விட்டவர். இவர்தான அந்த வீடியோவில் ஒரு தகவலைக் கூறியுள்ளார். அதாவது ரங்சாமி, ஏனாம் தொகுதியில் போட்டியிடப் போவதாக இவர் கூறியிருக்கிறார்.
ஏனாமில் போட்டியா
ரங்கசாமியை எல்லோரும் சேர்ந்து, ஏப்ரல் 6ம் தேதி தேர்தலில் ஏனாம் தொகுதியில் வேட்பாளராக ரங்கசாமியை முடிவு செய்துள்ளதாக சொல்கிறார் மல்லாடி. ஏன் இவர் இப்படி சொல்கிறார் என்றுதான் புரியவில்லை. ஆந்திரா மாநிலத்துக்குள் உள்ள ஒரு குட்டி பிராந்தியம்தான் ஏனாம். அது புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்குட்பட்டதாகும். இங்கு போய் ஏன் ரங்கசாமி போட்டியிட வேண்டும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்திரா நகர்
ரங்கசாமி போட்டியிடும் தொகுதி தேர்வு செய்து விட்டதாக மல்லாடி சொல்ல வேண்டிய அவசியம் என்ன என்றும் புரியவில்லை. சம்பந்தமே இல்லாமல் ஏனாம் தொகுதியில் போய் ஏன் ரங்கசாமி நிற்க வேண்டும் என்ற கேள்வியும் எழுகிறது. வழக்கமாக அவர் தட்டாஞ்சாவடி தொகுதியில்தான் போட்டியிடுவார். அங்கு 4 முறை அவர் போட்டியிட்டு வென்றுள்ளார். பிறகு இந்திரா நகர் தொகுதிக்கு மாறினார். 2011 மற்றும் 2016 ஆகிய இரு தேர்தல்களிலும் அங்குதான் போட்டியிட்டு வென்றார்.
காத்திருக்கும் கலாட்டாக்கள்
இப்படி இருக்கும்போது ஏன் ரங்கசாமி ஏனாம் தொகுதியில் போட்டியிட வேண்டும் என்று தெரியவில்லை. இந்த வீடியோ குறித்து ரங்கசாமி தரப்பில் விளக்கம் ஏதும் இதுவரை அளிக்கப்படவில்லை. தமிழ்நாட்டுக்கு நிகராக புதுச்சேரியிலும் ஏகப்பட்ட குப்பாச்சு குழப்பாச்சு வேலைகளுக்கு பஞ்சமிருக்காது என்று மட்டும் உறுதியாகத் தெரிகிறது. போகப் போக பொறுத்திருந்து பார்க்கலாம்.