புதுச்சேரியில் கோடை மழை.. கத்திரி வெயிலுக்கு நடுவே குளிர்ச்சியடைந்த மக்கள்
புதுச்சேரி: புதுச்சேரியில் கடந்த சில நாட்களாக கத்திரி வெயில் மக்களை வாட்டி வதைத்து வந்த நிலையில், இன்று சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக புதுச்சேரி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மழை பெய்ததால், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
Recommended Video
கொரோனா தொற்று பரவாமல் தடுக்க ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் பெரும்பாலான மக்கள் வீடுகளில் முடங்கியுள்ளனர். இருப்பினும் வெப்பத்தால் வீட்டிற்குள்ளே இருக்க முடியாத சூழ்நிலை உள்ளது.
வீட்டிற்கு வெளியே வந்தாலும் எங்கும் செல்ல முடியாத நிலை உள்ளது. கடந்த 4 ம் தேதி முதல் அக்னி நட்சத்திரம் தொடங்கி கத்திரி வெயில் அடிக்க தொடங்கியுள்ளதால், பகல் 12 மணியளவில் சுட்டெரிக்கும் வெயிலினால் சாலைகள் கானல்நீராக காட்சியளித்து வந்தது.
மேலும் மக்கள் வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க எலுமிச்சை, தர்பூசணி, கிர்ணி, வெள்ளரி ஆகியவற்றை வாங்கி சாப்பிட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று புதுச்சேரி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மழை பெய்துள்ளது.
புதுச்சேரி நகரப் பகுதியான முத்தியால்பேட்டை, லாஸ்பேட்டை, நேருவீதி, லெனின் வீதி, அண்ணா சாலை, காமராஜர் சாலை, மறைமலையடிகள் சாலை, சாரம், முதலியார்பேட்டை உள்ளிட்ட பகுதிகள் மற்றும் கிராமப்புறங்களான வில்லியனூர், மதகடிப்பட்டு, கன்னியக்கோவில், கனசெட்டிகுளம் உள்ளிட்ட பகுதிகளிலும் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மழை பெய்தது. இதனால் பூமி குளிர்ந்து குளிர்ச்சியான சூழல் நிலவி வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
இதேபோல் விழுப்புரம், கடலூர், சீர்காழி, சிதம்பரம், காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளிலும் பரவலாக மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
5 மாவட்டங்களில் வெப்பம் தகிக்கும்.. இதுல உங்க மாவட்டம் வருதானு பாருங்க!