அடகு கடையை உடைத்து ரூ. 2.5 கோடி கொள்ளை.. சிசிடிவி கேமராவின் ஹார்ட் டிஸ்க்கும் அபேஸ்!
புதுச்சேரி: புதுச்சேரியில் நகை அடகு கடை பூட்டை உடைத்து இரண்டரை கோடி மதிப்பிலான தங்கம் மற்றும் வெள்ளி நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி திலாஸ்பேட்டை பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ்குமார் ஜெயின். இவர் அதே பகுதியில் நகை அடகு வைக்கும் கடை நடத்தி வருகின்றார்.
இந்நிலையில் நேற்று இரவு வேலை நேரம் முடிந்ததும், வழக்கம்போல் கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். பின்னர் இன்று காலை கடைக்கு வந்த ராஜேஷ்குமார் கடையின் பூட்டை திறந்து உள்ளே சென்று பார்த்தபோது, கடையிலிருந்த லாக்கர்கள் உடைக்கப்பட்டு அதிலிருந்த வெள்ளி, தங்க நகைகளை மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்டதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இதுகுறித்து ராஜேஷ்குமார் ஜெயின் கோரிமேடு காவல்நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், மோப்ப நாய் மற்றும் கை ரேகை நிபுணர்கள் உதவியுடன், தடயங்களை சேகரித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நிச்சயித்த பெண் பேச மறுப்பு... வீடியோ காலில் லைவ்வாக தற்கொலை.. புதுச்சேரியில் சோகம்!
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், திருடர்கள் அதிகாலை நேரத்தில் ராஜேஷ்குமாரின் கடைக்கு வந்துள்ளனர். பின்னர் கடையின் பூட்டை உடைத்து உள்ளே சென்ற திருடர்கள், லாக்கரில் இருந்த வெள்ளி, தங்க நகைகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்துள்ளனர். மேலும் திருடர்கள் போலீசில் சிக்காமல் இருக்க அங்கிருந்த சிசிடிவி கேமராவின் ஹார்ட் டிஸ்க்கையும் தூக்கிச் சென்றுள்ளனர். திருடர்கள் கடையின் பூட்டை உடைத்தது மட்டுமல்லாமல், தங்களது வேலையை கச்சிதமாக முடித்தவுடன் பூட்டை மீண்டும் பூட்டிச்சென்றுள்ளனர்.
இதனிடையே நகைகளை அடகு வைத்தவர்கள் ராஜேஷ்குமாரின் அடகு கடையை முற்றுகையிட்டு வருவதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் திருடப்பட்டுள்ள நகையின் மதிப்பு இரண்டரை கோடி ரூபாய் அளவிற்கு இருக்குமென கடையின் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.