நாராயணசாமிக்காக தொகுதி தானம் செய்த ஜான் குமார்.. இடைத் தேர்தலில் போட்டி.. டெல்லி பதவியை துறந்தார்
நாராயணசாமிக்காக தொகுதி தானம் செய்த ஜான் குமார்.. இடைத் தேர்தலில் போட்டி.. டெல்லி பதவியை துறந்தார்
புதுச்சேரி: புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட விருப்ப மனு அளித்துள்ள ஜான்குமார் புதுச்சேரிக்கான டெல்லி சிறப்பு பிரதிநிதி பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
புதுச்சேரியில் காலியாக உள்ள காமராஜ் நகர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வரும் 21 ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், வேட்பாளர்களை தேர்வு செய்ய அரசியல் கட்சியினர் தீவிரம் காட்டி வருகின்றனர்.
இதனிடையே காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட முதல்வர் நாராயணசாமிக்காக நெல்லித்தோப்பு தொகுதியை விட்டுக்கொடுத்த ஜான்குமார், பிரதேச காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் ஜெயக்குமார் உள்ளிட்ட 11 பேர் விருப்ப மனு அளித்துள்ளனர்.
மேலும் காங்கிரஸ் கட்சி சார்பில் வேட்பாளர் இறுதி செய்வது குறித்து நாளை கட்சியின் தலைவர் சோனியா காந்தியை மாநில முதல்வர் நாராயணசாமி, காங்கிரஸ் மாநில தலைவர் நமச்சிவாயம் ஆகியோர் சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளனர்.
இந்நிலையில் காமராஜர் நகர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளித்திருந்த ஜான்குமார், புதுச்சேரி அரசு சார்பில் வழங்கப்பட்டிருந்த புதுச்சேரிக்கான டெல்லி சிறப்பு பிரதிநிதி பதவியை ராஜினாமா செய்வதற்கான கடிதத்தை முதல்வர் நாராயணசாமியிடம் அளித்துள்ளார்.
மேலும் அரசு சார்பில் வழங்கப்பட்ட கார் மற்றும் சட்டசபையில் உள்ள அலுவலகத்தையும் ஒப்படைத்துள்ளார். இதனால் காங்கிரஸ் கட்சி சார்பில் காமராஜர் நகர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்கு ஜான்குமாருக்கு வாய்ப்பு அளிக்கப்படலாம் என கூறப்படுகிறது.