‘கராத்தே கிட்ஸ்’.. 9 வயதில் பிளாக் பெல்ட்.. உலக சாதனை படைத்த காரைக்கால் இரட்டையர்கள்!
காரைக்காலைச் சேர்ந்த இரட்டையர்கள் குறைந்த வயதில் இரட்டை பிளாக் பெல்ட் வாங்கி சாதனைப் படைத்துள்ளனர்.
காரைக்கால்: காரைக்காலைச் சேர்ந்த இரட்டையர்கள் கராத்தே தற்காப்பு கலையில் சர்வதேச அளவில் சாதனை படைத்துள்ளனர்.
காரைக்காலைச் சேர்ந்த முருகானந்தம் - பிரியா தம்பதிக்கு ஸ்ரீவிசாகன், ஸ்ரீஹரிணி என இரட்டைக் குழுந்தைகள் உள்ளனர். இந்த இரட்டையர்கள் 3 வயதில் இருந்தே கராத்தே பயின்று வருகிறார்கள்.
தற்போது அவர்களுக்கு ஒன்பது வயது ஆகிறது. இந்த வயதிலேயே அவர்கள் இருவரும் கராத்தேவில் இரட்டை பிளாக் பெல்ட் வாங்கி சாதனை படைத்துள்ளனர். மேலும், தேசிய மற்றும் சர்வதேச அளவில் இருவரும் பல போட்டிகளில் வெற்றி பெற்று பதக்கங்களை வாங்கியுள்ளனர்.
இந்த சாதனை சிறுவர்களின் அம்மா பிரியா, இதுபற்றி கூறும்போது, " என்னோட கணவருக்கு ஸ்போர்ட்ஸ் ரொம்பப் பிடிக்கும். அதனால, எங்க பசங்களுக்கும் ஏதாவது ஒரு விளையாட்டைக் கத்துக் கொடுக்க நினைச்சோம். எங்க இரட்டைக் குழந்தைகளில் ஒன்று ஆண் இன்னொன்று பெண். இருவருமே சின்ன வயசிலிருந்து துருதுருன்னு இருப்பாங்க.
முதல்ல நீச்சல் பயிற்சியில சேர்த்துவிட்டோம். அது அவங்களுக்கு செட்டாகலை. அதனால கராத்தே கிளாஸ்ல சேர்த்துவிட்டோம். 3 வயசுலிருந்தே கராத்தே கிளாசுக்குப் போறாங்க. கராத்தேவை நல்லா கத்துகிட்டு இன்னைக்கு உலகிலேயே குறைந்த வயதில் பிளாக் பெல்ட் வாங்கிப் பெருமை சேர்த்திருக்காங்க.
இதைப் பார்க்கிறப்போ ரொம்ப சந்தோஷமா இருக்கு. கராத்தேயுடன் ஸ்ரீவிசாகன் செஸ் கிளாசுக்கும் போறான். அதுபோல் ஸ்ரீஹரிணி நல்லா ஓவியம் வரைவாள். அத்துடன் கட்டுரை எழுதுவதிலும் ஆர்வம் அதிகம்'' என்கிறார்.
கராத்தே மட்டுமின்றி மூன்று வயது முதலே சிலம்பம், யோகா, கிக் பாக்ஸிங், குபுடோ தேக்வாண்டோ என எண்ணற்ற தற்காப்பு கலைகளைக் கற்று வருகிறார்கள் இந்த இரட்டையர்கள். இந்தியா மற்றும் சர்வதேச அளவில் 200க்கும் மேற்பட்ட பதக்கங்களை வாங்கி உலகிலேயே இரட்டையர்கள் முதன்முதலாக 9 வயதுக்குள் கராத்தேவில் இரண்டு பிளாக் பெல்ட் மற்றும் இந்தியா மற்றும் சர்வதேச அளவில் அதிக பதக்கங்களை வாங்கி உலக சாதனையும் படைத்துள்ளனர்.
என்சிபி, காங்., சிவசேனா கூட்டணிக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் திடீர் வழக்கு
புதுச்சேரி ஆளுநர் . முதல்வர் மற்றும் பல்வேறு தரப்பினரிடமும் பாராட்டு மற்றும் பல்வேறு விருதுகளைப் பெற்ற இந்த இரட்டையர்கள் மக்கள் டிவியில் இருந்து சாதனை குழந்தைகள் விருதும் வாங்கி இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தச் சின்ன வயதில் சாதனை புரிந்த உங்களின் வருங்காலக் கனவுதான் என்ன? என ஸ்ரீவிசாகன் மற்றும் ஸ்ரீஹரிணியிடம் கேட்டால், ''ஒலிம்பிக்கில் கோல்டு மெடல் வாங்கணும், ஐ.ஏ.எஸ் படிச்சி கலெக்டராகணும்.'' என்கிறான் ஸ்ரீவிசாகன்.
''நானும் ஒலிம்பிக்கில் கோல்டு மெடல் வாங்கணும், எங்கள் தாத்தா இதய நோயால திடீர்ன்னு செத்துட்டாங்க. அதனால டாக்டருக்குப் படிச்சி, இதயநோய் நிபுணர் ஆகி எல்லோரையும் காப்பாத்தணும்'' என்கிறார் ஸ்ரீஹரிணி. இந்த சாதனைக் குழந்தைகளில் கனவு நனவாக நாமும் வாழ்த்துவோம்.