மோடி உத்தரவுப்படி ஆட்டிப்படைக்கிறார் கிரண் பேடி.. கெஜ்ரிவால் தாக்கு
Recommended Video
புதுச்சேரி: பிரதமர் மோடியின் உத்தரவின் பேரில்தான் துணை நிலை ஆளுநர் கிரண் பேடி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட புதுச்சேரி அரசை செயல்பட விடாமல் தடுப்பதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.
புதுச்சேரி முதல்வர் நாராயணசாமிக்கு நேரில் வந்து இன்று ஆதரவு தெரிவித்தார் கெஜ்ரிவால். அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசினார். அவரது பேச்சிலிருந்து..
நாராயணசாமி புதுச்சேரி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர். துணைநிலை ஆளுநர் கிரண்பேடி மத்திய பாஜக அரசால் நியமிக்கபட்டவர். டெல்லியிலும் இதே நிலைதான் உள்ளது.
கிரண்பேடி அமைச்சரவைக்கு எதிராக செயல்படுகிறார் . அரசியலமைப்பு சட்டத்தை மீறி வருகிறார் கிரண் பேடி. மக்களுக்கு பதில் சொல்லும் இடத்தில் முதலமைச்சர் நாராயணசாமி உள்ளார் .
இதற்கு ஒரே தீர்வு புதுச்சேரிக்கும், டெல்லிக்கும் மாநில அந்தஸ்து வேண்டும். டெல்லியும், புதுச்சேரியும் ஒன்று சேர்ந்துள்ளோம். பிரதமர் மோடி உத்தரவின்படி புதுச்சேரி ஆளுநரும், டெல்லி ஆளுநரும் ஆளும் அரசை முடக்கி வருகின்றனர்.
நான் ஆம் ஆத்மி பெயரில் வந்து ஆதரவு தெரிவிக்கவில்லை. புதுச்சேரி முதலமைச்சருக்கு டெல்லி முதலமைச்சரின் ஆதரவு இது. கிரண்பேடி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை தங்களது அன்றாட பணியை செய்யவிடாமல் தடையாக உள்ளார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசால் மட்டுமே மக்களுக்கு சேவை செய்ய முடியும்.
தேர்தலில் தோல்விடைந்தவர் ஆளுநர் மாளிகையில் அமரந்திருக்கிறார். வெற்றியடைந்த நாங்கள் தர்ணாவில் அமர்ந்துள்ளோம். நான்கு ஆண்டுகளுக்கு முன்பு டெல்லியில் நடைபெற்ற தேர்தலில் எங்களிடம் தோல்விடையந்தவர் கிரண்பேடி.
டெல்லி மற்றும் புதுச்சேரி ஆளுநரும் ஆளும் அரசை முடக்க சதி செய்கின்றனர். கிரண்பேடி மோடிக்காக மட்டுமே பணி செய்கிறார். சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகள் ஆகியும், புதுச்சேரிக்கும், டெல்லிக்கும் இன்னும் சுதந்திரம் கிடைக்கவில்லை.
புதுச்சேரிக்கும், டெல்லிக்கும் ஜனநாயகம் இல்லை. புதுச்சேரிக்கும், டெல்லிக்கும் முழு மாநில அந்தஸ்து பெற நானும், முதலமைச்சர் நாராயணசாமியும் இணைந்து போராடுவோம் என்றார் கெஜ்ரிவால்.