எதிர்கட்சியினருக்கு மரியாதை தருவதில் தாத்தா கருணாநிதி எங்கே... உதயநிதி எங்கே? - கேட்பது குஷ்பு
திமுக தலைவராக இருந்த கருணாநிதி எதிர்க்கட்சி தலைவர்களை மரியாதையுடன் பேச வேண்டும் என்று கூறுவார்.
புதுச்சேரி: திமுக தலைவர் ஸ்டாலின் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை மரியாதை குறைவாக பேசுவதாக குற்றம் சாட்டியுள்ள குஷ்பு, காவல்துறையினர் உட்பட எல்லோரையும் உதயநிதி ஸ்டாலின் மிரட்டி வருவதாக தெரிவித்துள்ளார். எதிர்கட்சியினருக்கு மரியாதை கொடுப்பதில் தாத்தா கருணாநிதி எங்கே? அவரது பேரன் உதயநிதி எங்கே என்றும் கேட்டுள்ளார் குஷ்பு.
சட்டசபைத் தேர்தலுக்கு பாஜக தயாராகி வருகிறது. பாஜக சார்பில் தாமரை எழுச்சி யாத்திரை நிறைவு விழா புதுச்சேரியில் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் பேசிய குஷ்பு, புதுச்சேரியில் தாமரை மலர்ந்தே தீரும் என்று சொன்னார். காங்கிரஸ் திமுக ஆட்சியில் புதுச்சேரி சீரழிந்துள்ளதாக குற்றம் சாட்டினார். மக்கள் வேதனையில் உள்ளனர். இதற்கு காரணம் லஞ்சம், ஊழல், முறைகேடுகள் அதிகரித்துள்ளது.
பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை
புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 3 ஆண்டுகளாக ரேஷன்கடைகள் மூடப்பட்டுள்ளன. அரசு ஊழியர்களுக்கு சம்பளம் இல்லை. குறிப்பாக பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. பெண்கள் வெளியே சென்றால் அவர்கள் எப்போது வீட்டிற்கு வருவார்கள் என்று குடும்பத்தினர் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். போதைப்பொருட்கள் அதிகம் பயன்படுத்தும் பகுதியாக புதுச்சேரி உள்ளது.
புதுச்சேரி அரசு
ஒரே நாடு ஒரே ரேஷன்கார்டு திட்டத்தின் மூலம் சாதி, மத, பாகுபாடு, ஏற்றத்தாழ்வுகள் இல்லாமல் அனைத்து மக்களுக்கும் அரிசி, கோதுமை போன்ற ரேஷன் பொருட்களை பெற முடியும். ஆனால் புதுவையில் அந்த திட்டம் செயல்படுத்தப்படவில்லை.
திட்டங்களை செயல்படுத்தாத முதல்வர் நாராயணசாமி ஆளுநரை குற்றம் சாட்டி வருகிறார்.
பிரதமர் மோடி உறுதி
மத்திய அரசு பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. பெண்கள் வங்கி கணக்கில் நிதி செலுத்தப்படுகிறது. மக்கள் அனைவரும் சொந்த வீட்டில் வாழும் வாய்ப்பை ஏற்படுத்தி தருவேன் என்று பிரதமர் மோடி உறுதி அளித்துள்ளார்.
எதிர்க்கும் எதிர்கட்சிகள்
விவசாயிகளை மேம்படுத்துவதற்காக மத்திய அரசு 3 வேளாண் சட்டங்களை கொண்டு வந்துள்ளது. இந்த சட்டம் தானாக கொண்டு வரப்படவில்லை. ஒன்றரை லட்சம் விவசாயிகளிடம் கலந்து பேசி ஆலோசனை நடத்திய பின்னர் தான் கொண்டு வரப்பட்டுள்ளது. காங்கிரஸ், திமுக எதிர்க்கட்சிகள் என்பதற்காக இதனை எதிர்க்கின்றனர். 1970ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் 5 விவசாயிகள் சுட்டுக்கொல்லப்பட்டது நினைவில் இல்லையா? என்று கேட்டார் குஷ்பு.
திமுக காங்கிரஸ் ஊழல்
கொரோனா காலத்தில் உலக அளவில் சிறப்பாக செயல்பட்ட தலைவராக பிரதமர் மோடி தேர்வு செய்யப்பட்டுள்ளார். நாட்டில் ஊழல், முறைகேடு குறித்து யார் வேண்டுமானாலும் பேசலாம். ஆனால் காங்கிரஸ், திமுகவிற்கு அதனை பற்றி பேச அருகதையில்லை. ஊழல் என்றால் என்ன என்று நாட்டிற்கு எடுத்து காட்டியது காங்கிரஸ், திமுகதான் என்று குற்றம் சாட்டினார்.
எதிர்கட்சியினருக்கு மரியாதை
எனது அரசியல் பயணம் திமுகவில் தான் தொடங்கியது. அப்போது திமுக தலைவராக இருந்த கருணாநிதி எதிர்க்கட்சி தலைவர்களை மரியாதையுடன் பேச வேண்டும் என்பார். ஆனால் தற்போது தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை எடுபிடி முதல்வர் என்று மரியாதை குறைவாக பேசுகிறார். உதயநிதி ஸ்டாலின் கூட்டத்திற்கு அனுமதியில்லை என்று காவல்துறையினர் தடுத்தபோது, அவர் அங்கு இருந்த காவலர்களிடம் உங்கள் பெயர் எனக்கும் தெரியும், இன்னும் 5 மாதத்தில் எங்கள் ஆட்சி தான். அப்போது நான் உங்களை என்ன செய்கிறேன் என்று பாருங்கள் என்று மிரட்டியுள்ளார். தாத்தா எங்கே? பேரன் எங்கே? என்று கேட்டார் குஷ்பு.
புதுச்சேரியில் பாஜக கூட்டணி ஆட்சி
காங்கிரஸ், திமுகவின் காலம் முடிந்து விட்டது. நடைபெற உள்ள சட்டசபைத் தேர்தலில் புதுவையில் பாஜக கூட்டணி ஆட்சி அமைவது உறுதி. தாமரை மலர்ந்தே தீரும். இனியும் நாம் அடிமைகள் இல்லை. மக்களை யாரும் ஏமாற்ற முடியாது. பெண்களை பாதுகாப்பாகவும், சுதந்திரமாகவும் வாழ வைப்பது பாஜக தான். எனவே மக்கள் பாஜகவிற்கு வாக்களிக்க வேண்டும். நான் தேர்தல் பிரசாரத்திற்கும் புதுவைக்கு வருவேன். வெற்றிக்கூட்டத்திற்கும் வருவேன் என்று அதிரடியாக பேசி முடித்தார் குஷ்பு.