"வாங்கண்ணா வணக்கங்கண்ணா".. நாராயணசாமியுடன் கிரண் பேடி நெகிழ்ச்சி சந்திப்பு.. மகிழ்ச்சி பேச்சு!
புதுவை: நீண்ட நாட்களுக்குப் பிறகு புதுவை துணைநிலை ஆளுநர் கிரண்பேடியும் முதல்வர் நாராயணசாமியும் நேருக்கு நேர் சந்தித்து கொண்டு வணக்கம் தெரிவித்துக் கொண்டனர்.
புதுவையில் துணை நிலை ஆளுநருக்கும் முதல்வருக்கும் இடையே ஆரம்பத்திலிருந்தே மோதல் போக்கு இருந்தது. இருவரும் ஒருவருக்கொருவர் விமர்சனங்களையும் முன் வைத்து கொண்டனர்.
இந்த மோதல் போக்கு அண்மைக்காலமாக மிகவும் அதிகரித்து வந்தன. இந்த நிலையில் இன்றைய தினம் இருவரும் நேருக்கு நேர் ஒரு நிகழ்ச்சியில் சந்தித்துக் கொண்ட போது ஒருவருக்கொருவர் வணக்கம் கூறிக் கொண்டனர்.
இந்தியாவின் முதுகில் குத்திய பாக்..கார்கில் வீரர்களுக்கு தலைவணங்குகிறேன்:மன்கி பாத் உரையில் மோடி
கார்கில்
கடந்த 1999-ஆம் ஆண்டு கார்கில் போரில் இந்தியா வென்றது. இந்த வெற்றிக்காக மரணமடைந்த ராணுவ வீரர்களின் தியாகத்தை நினைவுக்கூறும் பொருட்டு ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 26-ஆம் தேதி கார்கில் வெற்றி தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
புதுவை முதல்வர்
அந்த வகையில் கார்கில் போரின் 21-ஆம் ஆண்டு வெற்றி தினம் இன்று கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. புதுவையில் கடற்கரையில் உள்ள போர் வீரர்களின் நினைவிடத்தில் மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்த நிகழ்வில் துணைநிலை ஆளுநர் கிரண்பேடியும் புதுவை முதல்வர் நாராயணசாமியும் கலந்து கொண்டனர்.
பாராட்டு
அப்போது நீண்ட நாட்களுக்கு பிறகு, ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொண்டதால் இருவரும் மரியாதை நிமித்தமாக வணக்கங்களை பரிமாறிக் கொண்டனர். அப்போது கிரண்பேடி, சட்டசபை உறுப்பினர்களுக்கு எப்போது கொரோனா சோதனை செய்யவுள்ளீர்கள்? என கேள்வி எழுப்பிய அவர் பெரும் சவால்களுக்கு மத்தியில் பட்ஜெட்டை நிறைவேற்றியதற்கு முதல்வருக்கு பாராட்டுகளை தெரிவித்தார்.
ஆச்சரியம்
அதற்கு முதல்வர் நாராயணசாமி , நாளை அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்வதாக கூறிவிட்டு அவரது வாழ்த்துகளுக்கு நன்றியையும் தெரிவித்தார். அது போல் சபாநாயகர் சிவக்கொழுந்துவிடமும் கிரண்பேடி பேசி, மரத்தடியில் சட்டப்பேரவை நிகழ்வு புகைப்படத்தை பார்த்தேன், அது வரவேற்கத்தக்கது. அந்த படத்தை பத்திரமாக வைத்திருங்கள் என்றார். இந்த சம்பவங்கள் அங்கிருந்த பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.