கலகலவென சிரித்துப் பேசிய நாராயணசாமி - கிரண் பேடி.. புதுச்சேரியில் அடடே!
புதுச்சேரி: புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண் பேடியும், முதல்வர் நாராயணசாமியும் சிரித்துப் பேசியது அந்த மாநில மக்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
புதுச்சேரி மாநில துணைநிலை ஆளுநர் கிரண்பேடிக்கும், முதலமைச்சர் நாராயணசாமிக்கும் இடையே கடந்த மூன்று ஆண்டுகாலமாக அதிகார மோதல் இருந்து வருவது நாம் அனைவரும் அறிந்ததே. இவர்களின் சண்டையால் மாநிலத்தில் எந்தவொரு திட்டங்களும் நிறைவேற்றப்படாமல் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதற்கிடையே புதுச்சேரியில் ஆளும் அரசுக்குதான் அதிகாரம் உள்ளது என கடந்த சில மாதங்களுக்கு முன்பு சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பை எதிர்த்து துணைநிலை கிரண்பேடியும், மத்திய உள்துறை அமைச்சகமும் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர்.
ஆனால் இந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை உறுதி செய்த உச்சநீதிமன்றம், வழக்கை தள்ளுபடி செய்து இதுதொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தை நாடுமாறு மனுதாரர்களிடம் தெரிவித்துவிட்டது. தற்போது மத்திய உள்துறை அமைச்சகம் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.
நீதிமன்ற தீர்ப்புகள் முதலமைச்சர் நாராயணசாமிக்கே சாதகமாக வந்துகொண்டிருப்பதால், கடந்த சில நாட்களாக ஆளுநர் கிரண்பேடி முதலமைச்சர் நாராயணசாமியுடன் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்பதை தவிர்த்து வந்தார். அப்படியே காலத்தின் கட்டாயத்தால் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்றாலும், ஒருவரை முகம் பார்த்து பேசி வருவதை தவிர்த்து வருகின்றனர்.
இந்நிலையில் நாட்டின் 73 வது சுதந்திர தின விழாவையொட்டி ராஜ்நிவாசில் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி அளித்த தேநீர் விருந்தில் முதல் ஆளாக தனது அமைச்சரவை சகாக்களுடன் சென்று முதலமைச்சர் நாராயணசாமி கலந்துகொண்டது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
அதுமட்டுமல்லாமல் துணைநிலை ஆளுநர் கிரண்பேடிக்கு கை குளுக்கி சுதந்திர தின வாழ்த்து தெரிவித்த முதலமைச்சர், அங்கு போடப்பட்டிருந்த சோபாவில் அமர்ந்து துணைநிலை ஆளுநர் கிரண்பேடியுடன் நீண்ட நேரமாக சிறித்து பேசிகொண்டிருந்தார். நீண்ட நாட்களுக்கு பிறகு இருவரும் சிரித்து பேசிகொண்டிருந்ததை விழாவிற்கு வந்தவர்கள் தங்களுடைய செல்போனில் படம் எடுத்தனர்.
சுதந்திர தின தேநீர் விருந்தை நல்ல தொடக்கமாக எடுத்துகொண்டு, இனிமேலாவது துணைநிலை ஆளுநர் கிரண்பேடியும் - முதலமைச்சர் நாராயணசாமியும் ஒருவருக்கொருவர் சண்டைபோட்டுகொள்ளாமல், கருத்து வேறுபாடுகளை கலைந்து மீதமிருக்கும் இரண்டு ஆண்டுகால ஆட்சியில் இருவரும் இணைந்து, மக்கள் நலத்திட்டங்களை நிறைவேற்ற வேண்டுமென்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.