ரவுடிகளுக்கு எதிராக வணிகர்கள் கை கோர்க்க வேண்டும்.. கிரண் பேடி திடீர் அழைப்பு!
புதுச்சேரி: புதுச்சேரியில் ரவுடி மாமுல் கேட்டு மளிகை கடையில் ரகளையில் ஈடுபட்டு போலீசாரை தாக்கிய விவகாரம் எதிரொலியாக, ரவுடிகளை கட்டுபடுத்த வணிகர்கள் தங்கள் சொந்த முயற்சியில் ரோந்து குழுவை ஏற்படுத்த வேண்டுமென துணைநிலை ஆளுநர் கிரண்பேடி அறிவுறுத்தியுள்ளார்.
நேற்று முன்தினம் புதுச்சேரி அருகே வில்லியனூர் பகுதியில் மளிகை கடை ஒன்றில் ரவுடி ஒருவர் மாமுல் கேட்டு தகராறில் ஈடுபட்டார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விசாரணைக்கு வந்த போலீசாரையும் ரவுடி ஆபாசமான வார்த்தைகளால் திட்டி, கொலை மிரட்டல் விடுத்து போலீசாரை தாக்கினார். போலீசை ரவுடி தாக்கிய சம்பவம் புதுச்சேரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் இச்சம்பவம் குறித்து சமூக வலைதளத்தில் கருத்து பதிவு செய்துள்ள துணைநிலை ஆளுநர் கிரண்பேடி, ரவுடிகளை கண்காணிக்கவும், கட்டுபடுத்தவும் வணிகர்கள் ஒன்று சேர்ந்து தங்கள் சொந்த முயற்சியில் ரோந்து குழு ஒன்றை ஏற்படுத்த வேண்டும்.
மேலும் தங்களுடைய இடங்களில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி அவற்றை முழு செயல்பாட்டில் வைக்க வேண்டும். அதேபோல் வணிகர்கள் ரோந்து போலீசாருடன் இணைந்து செயல்பட வேண்டும். மேலும் ரவுடிகளை கட்டுபடுத்த போலீசார் சுதந்திரமாக செயல்பட வேண்டுமென கிரண்பேடி அறிவுறுத்தியுள்ளார்.
புதுச்சேரி அரசுக்கும், கிரண் பேடிக்கும் இடையே எப்போதுமே ஏழாம் பொருத்தம்தான். இந்த நிலையில் ரவுடி மேட்டரை வைத்து கிரண் பேடி கூறியுள்ள அறிவுரை நாராயணசாமி அரசுக்கு நேரடியாக விடப்பட்ட சவாலாக தெரிகிறது. காரணம், வணிகர்கள் சுதந்திரம் தரப்படாத போலீஸை நம்பி பயன் இல்லை, அரசை நம்பி பயன் இல்லை என்பது போல கூறியுள்ளார் கிரண் பேடி. எனவே ரவுடிகளுக்கு எதிராக நாராயணசாமி அரசு தீவிரம் காட்ட வேண்டிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
மீனாட்சியை தரிசிக்க வந்த மூதாட்டி.. கோவிலுக்குள் மயங்கி விழுந்து மரணம்.. மதுரையில் பரபரப்பு