பொய் சொல்லக் கூடாது.. பார்த்துப் பேசுங்க ஸ்டாலின்.. ஆளுநர் கிரண் பேடி எச்சரிக்கை
Recommended Video
புதுச்சேரி: புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்கு உட்பட்ட ஏனாமில் உள்ள ஒரு தீவை தனியாருக்கு விற்க முயல்வதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியதற்கு துணை நிலை ஆளுநர் கிரண் பேடி கண்டனம் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி காமராஜ் நகர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் நாளை மறுதினம் திங்கட்கிழமை நடைபெற உள்ளது. இங்கு காங்கிரஸ் - திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி சார்பில் முதலமைச்சர் நாராயணசாமிக்கு தனது நெல்லித்தோப்பு தொகுதியை விட்டுகொடுத்த ஜான்குமாரும், என்.ஆர்.காங்கிரஸ் - அதிமுக கூட்டணியில் என்.ஆர்.காங்கிரஸ் சார்பில் தொழிலதிபர் புவனேஸ்வரனும் போட்டியிடுகின்றனர்.
இந்நிலையில் காங்கிரஸ் வேட்பாளர் ஜான்குமாரை ஆதரித்து நேற்று முன்தினம் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் காமராஜ் நகர் தொகுதிகுட்பட்ட நான்கு இடங்களில் திறந்த வேனிலிருந்தபடி பிரசாரம் மேற்கொண்டார். அப்போது துணைநிலை ஆளுநர் கிரண்பேடியை ஸ்டாலின் கடுமையாக சாடினார்.
கிரண்பேடி புதுச்சேரிக்கு பச்சைத் துரோகம் செய்கிறார் என்றும், தமிழகத்தில் நேரடியாக பாஜக ஆட்சி நடைபெறுவதாகவும், புதுச்சேரியில் கிரண்பேடி மூலம் மறைமுக பாஜக ஆட்சி நடைபெறுகிறது என விமர்சித்தார். மேலும் புதுச்சேரி மாநிலத்திற்குட்பட்ட ஏனாம் பிராந்தியத்தில் ஒரு தீவை ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த தொழிலதிபருக்கு கிரண்பேடி விற்க முயல்வதாகவும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி ஸ்டாலினின் குற்றச்சாட்டுக்கு பதில் அளிக்கும் வகையில் வாட்ஸ் அப்பில் கருத்துகளை வெளியிட்டுள்ளார். அதில், தவறான கருத்துகளை வெளியிடும் முன் திமுக தலைவர் ஸ்டாலின் எதைப் பாதுகாக்கிறார் என்பதை முன்கூட்டியே அறிந்து கொள்வது அவசியம்.
பொய்யான தகவல்களைக் கூறுவது உங்களுக்குப் பொருந்தக்கூடியது அல்ல. ஏனாமில் அதிகாரிகளால் சுற்றுச்சூழல் மீறல்கள் செய்யப்பட்டுள்ளன. இதனால் ஏனாமில் அரசு ஊழியர்கள் ஓய்வூதியத்தை இழப்பார்கள். ஏனாமில் சுற்றுலாத்துறை திட்டத்தில் தீவு எண் 5 ல் சுற்றுச்சூழல் விதிகள் மீறப்பட்டுள்ளதுடன், ரூ.5 கோடியை சுற்றுலா என்ற பெயரிலும் இழந்துள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.