அன்று தமிழக மக்களை.. இன்று தமிழக அரசை.. திரும்ப திரும்ப வம்பிழுக்கும் கிரண்பேடி
புதுவை: அன்று தமிழக மக்களை கடுமையாக விமர்சனம் செய்த புதுவை துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தமிழக அரசை மறைமுகமாக விமர்சனம் செய்துள்ளார்.
தமிழகத்தில் நிலவும் தண்ணீர் பிரச்சினை தொடர்பாக புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு கருத்தை தெரிவித்திருந்தார். அதில் சென்னையில் வறட்சி ஏற்பட தமிழக அரசும் மக்களின் சுயநலமும் காரணம் என கிரண்பேடி விமர்சனம் செய்திருந்தார்.
தமிழக மக்களை இவ்வாறு எப்படி கிரண்பேடி குறை சொல்லலாம் என திமுக கண்டனம் தெரிவித்தது. இதையடுத்து கிரண்பேடியின் அலுவலகத்தை முற்றுகையிட்டும் போராட்டம் நடைபெற்றது.
திமுக எம்பி
கிரண்பேடியின் பேச்சு குறித்து நாடாளுமன்றத்தில் திமுக எம்பியான டி ஆர் பாலு எழுப்பினார். தமிழக மக்களை விமர்சித்தது தொடர்பாக அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
வருத்தம்
அப்போது பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசியபோது, தண்ணீர் பிரச்சினை தொடர்பாக புதுவை துணை நிலை ஆளுநர் வெளியிட்ட கருத்து தொடர்பாக விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. அவர் தான் கூறிய கருத்துக்கு வருத்தம் தெரிவித்ததாக ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
புதுவையில் தண்ணீர்
இந்த நிலையில் இன்று மீண்டும் ஒரு கருத்தை கூறி கிரண்பேடி சர்ச்சையில் சிக்கியுள்ளார். அவர் கூறுகையில் தமிழகத்தில் உள்ள எந்த அணையிலிருந்தும் புதுவைக்கு தண்ணீர் வருவதில்லை. நீர் நிலைகள் தூர்வாரப்பட்டதால் தமிழகத்திற்கு கொடுக்கும் அளவுக்கு புதுவையில் தண்ணீர் இருக்கிறது.
விமர்சனம்
ஓராண்டில் பெய்த மழை தண்ணீரை சேர்த்துவைத்ததால் மட்டுமே புதுச்சேரியில் தண்ணீர் பிரச்னை இல்லை. தமிழர்களின் மனம் பாதிக்கும் வகையில் ட்வீட் செய்யவில்லை என தெரிவித்தார். தூர்வார்தல், மழை நீர் சேகரித்தல் விவகாரத்தில் தமிழக அரசை கிரண்பேடி மறைமுக விமர்சனம் செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.